
மெர்சல் திரைப்படத்தை இணையதளத்தில் திருட்டுத்தனமாக பார்த்த பாஜக தேசிய செயலர் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் 'நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாகப் பார்த்தேன்' என்று ஒப்புக்கொண்டுள்ளார். பாஜகவில் தேசிய செயலர் பொறுப்பில் இருக்கும் எச். ராஜா தாம் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாகப் பார்த்தேன் என ஒப்புக்கொண்டுள்ளதுள்ளது மட்டுமல்லாமல் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக தலைவர்களின் இந்த செயலால் மெர்சல் படத்திற்கு ஆதரவாக லோக்கல் தலைகளிலிருந்து நேஷ்னல் தலைவர்கள் வரை ஒட்டுமொத்தமாக பாஜகவிற்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியதாவது; அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்க வாசல் போன்றவை திராவிடர் இயக்கத்திற்கு புத்துணர்ச்சியை அளித்தது. கருணாநிதியின் பராசக்தி, திரும்பிபார் போன்ற படங்கள் தமிழகத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தின.
இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ள தம்பி விஜய், ஜி.எஸ்.டியை பற்றி ஒரு வார்த்தை கூறியதற்காக எச்.ராஜாவும், தமிழிசையும் பேசி வருவது வருத்தம் அளிக்கிறது. மெர்சல் படத்திற்கு இருவரும் இலவசமாக விளம்பரப்படுத்தியுள்ளனர். இதற்கு விஜய் நன்றி கடன்பட்டுள்ளார். மெர்சல் படத்தை இண்டர்நெட்டில் பார்த்த எச்.ராஜா மீது போலீசார் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என இவ்வாறு தெரிவித்துள்ளார்.