டி.டி.வி. தினகரன் ஒரு தவிர்க்க முடியாத தலைவர்….மேலூர் பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு….
மதுரை மாவட்டம் மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் டி.டி.வி தினகரன் தலைமையில் நடந்தது. இதில் பேசிய தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், டி.டி.வி.தினகரன் தவிர்க்க முடியாத தலைவர் என்றும் அவருடைய பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.
அதிமுகவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் கைப்பற்ற முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டிய அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மீண்டும் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டம் நடத்தி வருகிறார்.
இதன் முதல் கட்டமாக மேலூர்-அழகர்கோவில் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி நிர்வாகிகள் போலீசாரிடம் விண்ணப்பித்திருந்தனர். போலீஸ் தரப்பில் எந்த தகவலும் இல்லாததால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தினகரன் பங்கேற்கும் மேலூர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து இன்று பலத்த பாதுகாப்புடன் மேலூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய நாஞ்சில் சம்பத், டி.டி.வி.தினகரன் தவிர்க்க முடியாத தலைவர் என்றும் அவருடைய பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.
இதில், தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ. சாமி மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.