பெண்களை போகப் பொருளாக நினைத்து வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டனை இல்லை என்றார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை என்கவுண்டர் செய்வோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரை அம்மாநிலபோலீசார் என்கவுண்டர் செய்துள்ள நிலையில் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொன்றவர்களை தெலங்கானா போலீசார் என்கவுண்டர் செய்திருப்பதை வரவேற்பதாக கூறினார். பெண்களை போகப் பொருளாக நினைத்து வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டனை இல்லை என்றார். அதேபோல் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது குண்டாஸ் சட்டத்தை ரத்தது தவறு என்றார்.
அதேபோல் எந்த இடத்தில் பாலியல் வன்புணர்வு நடந்ததோ அதே இடத்தில் வைத்து மக்கள் முன்னிலையில் 4 பேரை சுட்டால் தான் அச்ச உணர்வு வருவதுடன் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் மரணம்தான் தண்டனை என்ற அச்சத்தில் ஒழுக்கம் வரும் என தெரிவித்தார் . நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் பாலியல் வன்புணர்வு செயல்களில் ஈடுபடுபவர்களை என்கவுண்டர் செய்வோம் என சீமான் தெரிவித்தார் .