பாஜக பிரமுகர் கடையில் சரமாரி முட்டை வீச்சு..! அறந்தாங்கியில் பரபரப்பு..!

By Manikandan S R SFirst Published Feb 21, 2020, 12:33 PM IST
Highlights

அறந்தாங்கி அருகே பாஜக பிரமுகர் ஒருவரின் கடை மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அரசர்குளம் மேலப்பாலம் அருகே இருக்கும் வல்லம்பாடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பாண்டியன்(37). பால் வியாபாரம் பார்த்து வரும் இவர், சொந்தமாக கடை வைத்து நடத்தி வருகிறார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பாண்டியன் அறந்தாங்கி ஒன்றிய பா.ஜ.க. இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

சம்பவம் நடப்பதற்கு முன்தினம் கடையை திறந்து பணிகளை கவனித்து கொண்டிருந்த பாண்டியன், இரவு 8 மணியளவில் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பால் வியாபாரம் என்பதால் அதிகாலையிலேயே கடையை திறப்பது பாண்டியனின் வழக்கம். அதன்படி மீண்டும் அதிகாலை 2 மணியளவில் கடையை திறக்க வந்த பாண்டியனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடைக்கப்பட்டிருத்த கடையின் சட்டரில் மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக முட்டைகளை வீசியிருந்தனர்.

மேலும் கடை முன்பாக இருந்த விளம்பர பலகைகளையும் சேதப்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த பாண்டியன் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்திருக்கும் நாகுடி போலீசார் மூட்டை வீச்சில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பாஜக பிரமுகர் ஒருவரின் கடை மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உணர்வோடு கலந்த தமிழ் தாய்மொழி அல்ல..! எங்கள் உயிர்மொழி..!

click me!