மோடி மீண்டும் பிரதமர் ஆகணுமா ? வேண்டாமா ? கருத்துக் கணிப்பில் அதிரடி தகவல் !!

By Selvanayagam PFirst Published May 21, 2019, 8:42 PM IST
Highlights

இந்தியாவின் பிரதமராக மோடிதான் மீண்டும் வர வேண்டும் என்று  44 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பில் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஆங்கில ஊடகங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி நாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியயுள்ளது. அந்த கருத்துக் கணிப்பு தொடர்பாக வாக்களிக்கும்போது பிரதமர் யார் என்ற விஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டதா? என்று கருத்துக் கணிப்பில் ஆய்வு செய்யப்பட்டது.

தி ஹிண்டு- சிஎஸ்டிஎஸ்- லோக் நிதி- நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், மோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 24 சதவிகித மக்களின்  ஆதரவு கிடைத்துள்ளது. 

அதில், மோடியின் தலைமை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, பாஜக வேட்பாளர்களுக்கு மிக, மிக சாதகமாக இருந்தன என்று தெரிய வந்துள்ளது. பாஜக  வேட்பாளர்கள் மீது கடும் அதிருப்தி இருந்தாலும் மோடிக்காக, பாஜகவுக்கு  வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.

அந்த வகையில் 44 சதவீதம் பேர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், படித்தவர்கள். மற்ற மாநிலங்களை விட இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு மிக அதிக ஆதரவு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தனிப்பட்ட முறையில் மோடிக்கு இருக்கும் இந்த செல்வாக்குதான் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்க வழி வகுத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இத்தகைய தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை 24 சதவீதம் பேர்தான் ஆதரித்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. பாஜக தொண்டர்களில் 80 சதவீதம் பேர் 2014-ல் மோடியை ஆதரித்து இருந்தனர். தற்போது அது 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. காங்கிரசை சேர்ந்தவர்களில் 7 சதவீதம் பேரும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்களில் 11 சதவீதம் பேரும் மோடிக்கு ஆதரவளித்துள்ளனர்.

மோடி பிரதமர் வேட்பாளராக இல்லாமல் இருந்திருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து இருக்க மாட்டேன் என்று 32 சதவீதம் பாஜக  தொண்டர்கள் தெரிவித்தனர். மற்ற கட்சிகளில் இருக்கும் மோடி மீதான அனுதாபிகளும் இதே கருத்தை வெளியிட்டனர். இதன் மூலம் மோடிக்கு பாஜகவையும்  தாண்டி மற்ற கட்சிகளிலும் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பிரதமர் யார் என்பதை பொருத்து வாக்களித்து இருப்பதாக கணிசமானவர்கள் கூறியுள்ளனர்.

எனவே இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்காக பாஜகவுக்கு அதிக அளவு வாக்குகள் விழுந்தது தெரிய வந்துள்ளது. பட்டதாரிகளிடமும் தற்போதைய பிரதமருக்கே  அதிக ஆதரவு உள்ளது. இந்தி அதிகம் பேசும் மாநிலங்களில்,  உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே மோடி பிரதமர் வேட்பாளர் என்கிற தாக்கம் இல்லை. இங்கே, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் முகத்தை வைத்து வாக்குகள் விழுந்துள்ளன.

ஒட்டுமொத்தத்தில் 46 சதவீதம் பேர் கட்சியை பார்த்து வாக்களித்துள்ளனர். 32 சதவீதம் பேர் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பார்த்து  வாக்களித்துள்ளனர். 17 சதவீதம் பேர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பார்த்து ஓட்டு போட்டுள்ளனர்.

click me!