என் மீது யாராவது ஒரு ஆள் ஊழல் புகார் கூற முடியுமா ? பிரதமர் மோடி சவால் !!

By Selvanayagam PFirst Published May 15, 2019, 6:59 AM IST
Highlights

என் மீது ஊழல் புகாரோ அல்லது நான் சொத்து வாங்கி குவித்ததாகவோ, உங்களால் நிரூபிக்க முடியுமா ? என எதிர்கட்சிகளுக்கு  பிரதமர் நரேந்திர மோடி  சவால் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 கட்டத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் வரும் 19 ஆம் தேதி இறுதிக்க கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் பாலியாவில், நடைபெற்ற பாஜக  தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அப்போது பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் அமைந்துள்ள கலப்பட கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும், பகிரங்கமாக சவால் விடுக்கிறேன். நான் ஊழல் செய்ததாகவோ, சொத்துகள் வாங்கி குவித்ததாகவோ புகார் கூற முடியுமா ?  பினாமி பெயர்களில் வீடுகள், பங்களாக்கள், வணிக வளாகங்கள் வாங்கி குவித்ததாகவோ, வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்ததாகவோ, வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்ததாகவோ, உங்களால் புகார் கூற முடியுமா ? ; அதை நிரூபிக்க முடியுமா? என அடுக்கடுக்காக சவால் விடுத்தார்.

என் மீது பொய்யான புகார்கள் கூறுவதை, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை விட்டு, இந்த சவாலை, எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும். பணக்காரனாக வேண்டும் என, நான் கனவு கூட கண்டதில்லை.

மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் பாவத்தை செய்ய துணிந்ததில்லை. மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டும்; தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் பெருமையை காக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதனால், ஆத்திரமடைந்த அண்டை நாடான, பாகிஸ்தானும், அங்குள்ள பயங்கரவாதிகளும் காணாமல் போயுள்ளனர் என கூறினார்.
.
இத்தனை ஆண்டுகளாக, ஒருவரை ஒருவர் வசைபாடி வந்த கட்சிகள், தற்போது கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் முடிந்ததும், மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் என மோடி தெரிவித்தார்..

click me!