எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக திரண்ட எம்எல்ஏக்கள்... அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன..?

By Asianet TamilFirst Published May 10, 2021, 9:20 PM IST
Highlights

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 61 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்துள்ள அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த 7ம் தேதி மாலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.
கட்சி அலுவலகத்துக்கு வெளியே ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. கட்சிக்கு ஒற்றைத் தலைமையே தேவை என்றும் முழங்கினர். அதிமுக 66 தொகுதிகளில் வெல்ல எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என்று இபிஎஸ் தரப்பும், தென் மாவட்டங்களில் அதிமுக தோற்க வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய ஈபிஎஸ்தான் காரணம் என்று ஓபிஎஸ் தரப்பும் மாறிமாறி புகார் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், சட்டமன்ற தலைவரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. 
4 மணி நேரம் நடந்தும் முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது. இந்நிலையில் முடிவு எடுக்கப்படாமலேயே இக்கூட்டம் மே 10-ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இன்று இக்கூட்டம் அதிமுக அலுவலகத்தில் மீண்டும் நடைபெற்றது. இக்கூட்டம் 3 மணி நேரம் வரை நீடித்தது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற 65 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக  61 எம்.எல் .ஏக்கள் ஆதரவு  தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி என்பதால் அவருக்கே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொங்குமண்டலம் மட்டுமின்றி, வடக்கு மண்டமல், மத்திய மண்டலம், தென் மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிச்சாமிகே ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்காததால்தான் ஓ.பன்னீசெல்வம் வேறு வழியின்றி போட்டியிலிருந்து ஒதுங்கிகொண்டதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்பிறகே எடப்பாடி பழனிச்சாமி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக சார்பில் அறிக்கையும் வெளியிட்டப்பட்டது என்கிறார்கள் அக்கட்சியினர்.
 

click me!