டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தியாகத்துக்காகவே விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
பின்னர் அவர்கள், புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். குதிரைப்பேரத்தை தவிர்ப்பதற்காகவே ஆதரவு எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக டிடிவி தெரிவித்திருந்தார்.
புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்கள், கர்நாடக மாநிலம் குடகில் உள்ள சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, சசிகலா, தினகரன் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசினால் வழக்கு தொடருவோம் என்றார். எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் மக்கள் பிரச்சனைகள் பாதிக்கப்பட்டால் அவர்களது காலில் விழவும் தயார் என்றும் அவர் கூறினார்.
தியாகத்துக்காகவே எம்எல்ஏக்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்தார்.