அவங்க ரெண்டு பேரையும் நம்பவே மாட்டேன்! எப்போவேணும்னாலும் காலை வாரிவிடுவாங்க... பிடிவாதம் பிடிக்கும் ஸ்டாலின்!

By sathish kFirst Published Nov 29, 2018, 8:40 AM IST
Highlights

 தி.மு.க கூட்டணியில் வைகோவையும், திருமாவளவனையும் சேர்க்கும் விவகாரத்தில் ஸ்டாலின் பிடிவாதம் பிடிப்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்ப்பு வாக்குகளை சிதறடித்து தி.மு.கவை பலவீனப்படுத்தி மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைய நடராஜனால் உருவாக்கப்பட்டது தான் மக்கள் நலக் கூட்டணி. நடராஜன் போட்ட மாஸ்டர் பிளானை வைகோ கனக்கச்சிதமாக முடித்தது தி.மு.க தரப்புக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்திய விஷயங்களில் ஒன்று. மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் சேர வேண்டும் என்பதற்காக அவரை முதலமைச்சர் வேட்பாளராக கூட வைகோ ஏற்றுக் கொண்டிருந்தார்.

இதே போல் நடராஜன் தான் மக்கள் நலக்கூட்டணியின் அடிநாதம் என்பது தெரிந்தே தான் திருமாவளவனும் அந்த கூட்டணியில் இணைந்தார். தேர்தலில் வெற்றி பெற்று அந்த கட்சியினர் எம்.எல்.ஏ ஆகவில்லை என்றாலும் வேறு வழியில் அவர்களுக்கு நடராஜன் சிறப்பு செய்ததும் மேல் மட்ட அரசியல்வாதிகள் பலருக்கும் தெரிந்த கதை. இதனால் தான் கூட்டணி விவகாரத்தில் வைகோ மற்றும் திருமாவை அந்தரத்திலேயே ஸ்டாலின் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் விடுதலைச் சிறுத்தைகளோடு கூட்டணி வைத்த தேர்தல்கள் அனைத்திலுமே தி.மு.க தோல்வியையே தழுவியுள்ளது. 2001 சட்டமன்ற தேர்தல், 2011 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். 2009 நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் தான் தி.மு.க – வி.சி.க கூட்டணி கணிசமான இடங்களில் வென்றது. இதன் பிறகு வி.சி.கவுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.கவிற்கு பெரிய அளவில் சாதகம் ஏதும் இல்லை.

இதே போல் 2004ம் ஆண்டு ம.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது மட்டும் தான்தி.மு.கவிற்கு சாதகமான முடிவு வந்தது. அதன் பிறகு 2006ம் ஆண்டு தேர்தலில் கடைசி நேரத்தில் வைகோ கம்பி நீட்டிவிட்டு அ.தி.மு.கவிடம் சென்றுவிட்டார். அதன் பிறகு சுமார் 12 ஆண்டுகள் கழித்து இப்போது தான் மீண்டும் தி.மு.க வசம் வைகோ வந்துள்ளார். 

2004ம் ஆண்டு ம.தி.மு.கவிற்கு இருந்த வாக்கு வங்கி தற்போது அந்த கட்சிக்கு இல்லை. எனவே தான் ம.தி.மு.கவையும் கூட்டணியில் சேர்ப்பதில் ஸ்டாலின் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகளை பொறுத்தவரை தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதற்காக அந்த கட்சியுடன் ஸ்டாலின் மிகவும் இணக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வைகோவும் சரி, திருமாவளவனும் சரி எந்த நேரத்திலும் கூட்டணி மாறுவார்கள் என்பதால் அவர்கள் விஷயத்தில் தான் உடனடியாக எதையும் நம்பப்போவதில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஸ்டாலின் வெளிப்படையாகவே கூறியதாக சொல்லப்படுகிறது.

click me!