மு.க.ஸ்டாலினின் வாய்ச்சவடால்... மாஸ் காட்ட அழைக்கும் ராமதாஸ்..!

By Thiraviaraj RMFirst Published May 29, 2019, 4:31 PM IST
Highlights

திமுகவும், மற்றக் கட்சிகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழ முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், ’’ தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாமக, பாஜக, தேமுதிக கட்சிகள் அடங்கிய அதிமுக கூட்டணி தோல்வி அடைந்துள்ளன. இந்நிலையில், அதை திமுகவும், மற்றக் கட்சிகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழ முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் பாமக 7 இடங்களில் போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் மொத்தம் 23 லட்சம் வாக்குகளை பாமக பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாமக வாங்கிய வாக்குகளின் விழுக்காடு 5.40. கடந்த 10 ஆண்டுகளில் பாமக வாங்கிய வாக்குகளை விட இது அதிகம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய அதே அளவிலான வாக்குகளை, இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெறும் 7 இடங்களில் போட்டியிட்டு பாமக பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாமகவுக்கு எந்த வகையிலும் இழப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. தேர்தலில் வெற்றியும், தோல்வியும் இயல்பானவை. ஒரு தேர்தலில் வெற்றியடைந்த கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும், அந்த தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறோம்.

தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை கூற முடியும். பாமக சரிவுகளை சந்திக்கவே சந்திக்காத கட்சி அல்ல. கடந்த காலங்களில் இதைவிட மிக மோசமான தோல்விகளை பாமக சந்தித்திருக்கிறது. சாதாரண வேகத்தில் பயணித்து சரிவுகளை சந்திக்கும் போது, உடனடியாக அதிக வேகத்தில் மீண்டும் பயணித்து இலக்குகளை எளிதாக கடக்கும் திறன் பா.ம.க.வுக்கு உண்டு.

இதற்கு காரணம் பா.ம.க உந்தித் தள்ளும் சக்தியாக இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள். இளைஞர்கள். இளைஞர்கள் என்பது தான். கடந்த காலத் தேர்தல்களில் பாமக அடைந்த தோல்விகளின் ஈரம் காயும் முன்பே நமது வாக்கு வலிமையை நிரூபித்துக் காட்டிய தருணங்கள் ஏராளம். இப்போதும் நமது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்துக்காட்ட இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், இரு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் என வாய்ப்புகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.

பாட்டாளி இளைஞர்களும், போருக்காக காத்திருக்கும் புறநானூற்று வீரர்களைப் போல, மக்கள் சந்திப்பு, கொள்கைப் பிரசாரம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நமது வலிமையை பெருக்கிக் கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். புதிய வரலாறுகளை படைக்க வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
 

click me!