மக்கள் நம்மபக்கம் தான்... தலைநகரம் அதிரனும்... பக்கா ‘ஸ்கெட்ச்’ போட்ட ஸ்டாலின்! மண்டை காய்ச்சலில் ஆளும் கட்சி...

First Published Apr 6, 2018, 2:28 PM IST
Highlights
MK Stalin plan for next protest


இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை எப்படி நடத்தப் போவது என பக்காவாக பிளான் போட்டு கொடுத்திருக்கிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெற்ற நிலையில், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அப்போது பேசிய ஸ்டாலின், தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை நடைபெறும் என்றும், அதில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை எவ்வகையில் நடத்துவது என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் துவங்கியது. திருநாவுக்கரசர், கி.வீரமணி, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், ஜி .ராமகிருஷ்ணன், காதர் மொய்தீன் உள்ளிட்டத் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். மதிமுக சார்பில் திருப்பூர் துரைசாமி கலந்துகொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, முழு அடைப்பு போராட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்றாவதாக உச்ச நீதிமன்றத்தில் மூன்று மாதம் அவகாசம் கேட்டுள்ள மத்திய அரசின் மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானமாக இயற்றியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

காவிரி உரிமை மீட்புப் பயணம் குறித்துப் பேசிய ஸ்டாலின், உரிமை மீட்பு பயணத்தை டெல்டா பகுதி முழுவதும் நடத்திட வேண்டும் என்று அனைத்துத் தலைவர்களும் ஒட்டுமொத்தமாகத் திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து உரிமை மீட்பு பயணத்தை நடத்த உள்ளோம்.

நாளை திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்து முதல் பயணம் புறப்படுகிறது. மற்றொரு பயணம் வரும் 9ஆம் தேதி அரியலூர் மாவட்டத்திலிருந்து தொடங்கப்பட உள்ளது. இதில் தலைவர்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு கட்சியினுடைய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இரு பயணத்தையும் திக தலைவர் கி.வீரமணி துவக்கி வைக்கிறார்" என்றும் கூறினார்.

மேலும், "1989 இல் கொண்டுவரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் அளவுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி சென்னை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள்" என்றும் ஸ்டாலின் கூறினார்.

click me!