
வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில், வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இன்று காலை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பின்னர் கழிவுநீர் அகற்றும் நிலையங்களில் ஆய்வு செய்தார். அடையாறு பகுதியில் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதற்குப் பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டுள்ளதாகவும் 15 மண்டலங்களாக பிரித்து கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெள்ள பாதிப்புகள் தொடர்பாக இதற்கு முன்பைவிட துரித கதியில் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
1500 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 75% பணிகள் முடிந்துவிட்ட நிலையில், எஞ்சியுள்ள பணிகளும் துரித கதியில் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
இப்படியாக, அமெரிக்கா, லண்டன், பெங்களூருவைவிட வெள்ள தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.
நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறும் நிலையில், தாம்பரம் முடிச்சூர், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நாள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியிருப்பதாக செய்தியாளர் கேள்வி கேட்டதை அடுத்து தொடர்ச்சியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தொடர் கேள்விகள் கேட்ட செய்தியாளரின் பெயரை அமைச்சர் கேட்டதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.