
மின்கட்டணத்திற்கு ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருட்கள் மீது கலால் வரியை உயர்த்தி மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் தமிழ்நாடு பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், நுகர்வோர்களின் கருத்துகளைக் கேட்டறியாமல், நடப்பு மாத மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி விதித்து கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. கலைஞர் ஆட்சி விவசாயிகளுக்கு முற்றிலும் இலவச மின்சாரம் வழங்கி சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து வந்த ஆட்சியும் மின் நுகர்வோர் நலன் கருதி மானியங்கள் வழங்கி, கட்டணச் சலுகை அளித்து உதவி வருகின்றன. தற்போதுள்ள நடைமுறையில் வீடுகளின் மின்நுகர்வில் முதல் 100 யூனிட் மின்சாரம் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது.
இதுபோல் கைத்தறி மற்றும் விசைத்தறிக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின் நுகர்வில் 100 யூனிட்டுக்கும் குறைவாகப் பயன்படுத்திய வீடுகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், வசூலிக்கப்பட்ட வரித் தொகையைக் கட்டணத்தில் வரவு வைத்து ஈடு செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய தமிழக மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூலிப்பது இல்லை. மின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. புதிதாக ஜிஎஸ்டி வசூலிப்பது போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். மின்மாற்றிகளில் நவீன மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் மின்சார கட்டணத்தில் ஜிஎஸ்டி இருக்காது என்பது உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.