தேர்தல் காரணமாக மு.க. ஸ்டாலின் வேல் குத்துவார்... தீ கூட மிதிப்பார்... மரண கலாய் செய்த செல்லூரார்..!

By Asianet TamilFirst Published Jan 24, 2021, 9:00 PM IST
Highlights

தேர்தல் வந்து விட்டதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் குத்தவும் செய்வார், அம்மனுக்கு தீகூட மிதிப்பார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் வைத்து வழிபட்ட வேல் பரிசாக வழங்கப்பட்டது. இந்த வேலுடன் காட்சியளித்த மு.க. ஸ்டாலினை பாஜகவினரும் அதிமுகவினரும் கிண்டலடித்து வருகிறன்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை வாங்கி கீழே கொட்டியவர்தான் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். குங்குமம் கொடுத்தால் அழிப்பது, விபூதி கொடுத்தால் தூக்கி எறிவது, இது போன்ற செயலை மக்களும் கடவுளும் ஏற்க மாட்டார்கள். தைப்பூசத்துக்கு விடுமுறை, அனைத்து மதத்துக்கும் தேவையான நலத்திட்டங்கள் செய்வதால் கடவுளே அதிமுக பக்கம்தான் இருப்பார்.
தேர்தல் வந்துவிட்டதால் மு.க.ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டுமல்ல, வேல் குத்தவும்கூட செய்வார், அம்மனுக்கு தீ கூட மிதிப்பார். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும். மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்து எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வராவார். மு.க. ஸ்டாலின் ஒரு நாளும் முதல்வராக முடியாது” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார். 
 

click me!