
சமூகநீதி மக்களுக்கான படம்தானா மந்திரிக்கு இல்லையா என அரசு அதிகாரியை சாதி குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் பதவிநீக்கம் செய்யப்படுவாரா? என கேள்வி எழுப்பி மக்கள் நீதி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணி செய்துவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அவர்களை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியல் இனத்தவர் என்று பலமுறை கூறி அவர் மீது சாதிய ரீதியிலான தாக்குதலும், பலமுறை அவரை ஒருமையில் பேசி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
அதிமுகவின் சேர்மேன் பேச்சை தான் அவர் கேட்பார் என்றும் அமைச்சர் சொல்வதை அவர் கேட்பதில்லை என்றும் சொல்லி நீ SC BDO தானே என்றும், உன்னை இன்னைக்கே வேறு இடத்திற்கு தூக்கி அடிக்கிறேன் என்றும் தன் சாதியை வெறியையும், அதிகார பலத்தையும் காட்டி உள்ளதாக ராஜேந்திரன் அவர்கள் புகார் சொல்கிறார். அதோடு இல்லாமல் தமிழ்நாடு முழுக்க இனிமே நாங்கதான், வேற எவனும் வர முடியாது என்று பேசியதாகவும் சொல்லியிருக்கிறார். இது தமிழ்நாடு முழுக்க இனி திமுக தான் என்கிற ஆணவப் பேச்சா அல்லது சாதிய ரீதியிலான அகந்தை பேச்சா என்று தெரியவில்லை. ஒருபக்கம் சமூகநீதிக் காக்க முதலமைச்சர் ஸ்டாலின் குழு அமைக்கிறார். சாதி மதம் கடந்தது எங்கள் திராவிடம் என்று பெருமையாக பேசுகிறார்.
ஆனால் அவர் அமைச்சரவையில் இருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் மீது சாதிய ரீதியான புகார் வந்துள்ளது வெட்கக்கேடானது. இதுகுறித்து உடனடியாக விசாரித்து இது உண்மை எனும் பட்சத்தில் போக்குவரத்து துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதுவே சமூகநீதியை காப்பதாய் முதல்வர் கூறும் செய்தியை உண்மையாகும் என்று மக்கள் நீதி மய்யம் கருதுகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கலைஞருக்கு பிடித்த வள்ளுவனின் வரிகளை முதல்வருக்கு நினைவூட்ட விரும்புகிறது மக்கள் நீதி மய்யம். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.