மக்களே பயப்படாதீங்க... டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சொன்ன நல்ல செய்தி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 24, 2021, 5:02 PM IST
Highlights

டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கவியரசு கண்ணதாசன் 95 வது பிறந்தநாள் விழா ஒட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருக்கும் படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், பி.கே. சேகர்பாபு,  சாமிநாதன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, மயிலை வேலு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் செவிலியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை அளித்து தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் யாரேனும் இருக்கிறார்களா என்று சோதனை செய்து வருகிறோம் என்று கூறினார்.

இந்த தொற்று வீரியமிக்கது என்றாலும் தொடர் சிகிச்சை அளித்து அதனை குணப்படுத்தலாம் என்று தெரிவித்த அவர், பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டியது இல்லை என்றார். அதேபோல வெளிநாடுகளில் இந்த வைரஸ் பரவிய போது கூட தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறிய அமைச்சர், டெல்டா பிளஸ் குறித்து மருத்துவ வல்லுனர்கள் தொடர் ஆய்வும் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் விமான நிலையத்திலும் கண்காணிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம் என்றும், ஏற்கனவே வெளிநாட்டு விமானங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் விமான சேவை தொடங்கினாலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
 

click me!