முதல்வரை பற்றி குறை பேசினால் குடங்களால் முகத்தில் குத்துவிடுங்கள்... தமிழக அமைச்சரின் சர்ச்சை ஐடியா..!

By Asianet TamilFirst Published Sep 26, 2020, 8:51 AM IST
Highlights

அதிமுக ஆட்சியையும் தமிழக முதல்வரையும் பற்றி யாராவது குறை பேசினால், தண்ணீர் குடங்களால் முகத்தில் குத்துவிடுங்கள் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூட்டுறவுத்துறை சார்பில் பெட்ரோல் பங்க் திறப்பு விழாவும் சுயஉதவி குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும் விழாவும் ஒன்றாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது ஹைலைட்டானது.
அவர் பேசும்போது, “அதிமுக ஆட்சி உண்மையாகவே மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ஆட்சியைப் பற்றி குறை பேசுகிறார்கள். இனி, இந்த ஆட்சியை பற்றியோ  தமிழக முதல்வரை பற்றியோ யாராவது தவறாக பேசினால், தண்ணீர் பிடிக்கும் குடங்களை கொண்டு முகத்தில் குத்துவிடுங்கள். பேருந்துவிட வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டார்கள். அதேபோல 12 மணிக்கு முன்பாக கடையை திறக்க வேண்டும் என்று மதுப்பிரியர்களும் கேட்டார்கள். இந்த இரண்டுமே  அவர்களுடைய விருப்பப்படி தற்போது செயல்பட்டு வருகிறது” என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். 

click me!