விரைவில் மாநில கல்வி கொள்கை? பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

By Narendran SFirst Published Dec 10, 2021, 7:06 PM IST
Highlights

மாநில கல்வி கொள்கையை வடிவமைப்பதற்கான குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

மாநில கல்வி கொள்கையை வடிவமைப்பதற்கான குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்த டேப்லட் வழங்கப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத தால் ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சினைகள் படிப்படியாக சரி செய்யப்படும். புதிய கல்விக் கொள்கையையின் சிறப்பு அம்சங்களை ஆளுநர் தொடர்ச்சியாக பேசி வருகிறார். தமிழக முதல்வர் மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கான திட்டம் வைத்துள்ளார். அதற்காக முதன்மை செயலாளருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாநில கல்வி கொள்கையை வடிவமைப்பதற்கான குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதற்கான பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவை தமிழக முதல்வர் இறுதி செய்வார்.

ஒரு சில மாதங்களில் இந்த கல்வி கொள்கை எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வாக அமையும். கல்வி துறையில் புதிய பணி நியமனம், பதவி உயர்வு போன்றவை படிப்படியாக நிறைவேற்றப்படும். தேசிய கல்வி கொள்கையில் 3ம் வகுப்பிற்கு பொது தேர்வு எழுத வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியல்ல, ஏற்புடையதும் அல்ல. மழலையர் பள்ளி மாணவர்களுக்கு montessori செயல்முறை கல்வி முறையில் மாற்ற வேண்டி உள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள கூடாது. கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது, கண்டிப்பாக வழித்தடங்களில் தேவையான பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார். முன்னதாக திருச்சி மாவட்டம், மணிகண்டத்தில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் படத்திற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அந்த பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் 80 மாணவர்களுக்கு கையடக்கக் கணினியினை வழங்கினார்.  அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும்.

அதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்த அதற்கு இத்தகைய கையடக்க கணினிகளும், மாதிரி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. மாணவர்கள் முழு கவனத்துடன் படித்து தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் பெருமை தேடித்தர வேண்டும். அக்டோபர் 2 ஆம் தேதி பள்ளி துவங்கப்பட்டுள்ளது. மணப்பாறையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் அருண்குமார் சிறப்பாக படித்து வெளியே வந்தார். அவருடைய முழு கல்வி செலவையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இது போல அனைத்து மாணவர்களும் சிறப்பாக படித்து மேலே வரவேண்டும். அனைத்து மாணவர்களின் செலவுகளையும் தாயுள்ளத்தோடு அரசு ஏற்கும். திருச்சி மாவட்டத்தில் இன்று 80 மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது, இதே போல் மற்ற மாவட்ட ஆட்சியர்களும் மாணவர்களை ஊக்கப்படுத்த இதுபோன்ற முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

click me!