தமிழன், திராவிடம் என அறிவாயுதம் ஏந்திய அய்யோத்தி தாச பண்டிதருக்கு மணி மண்டபம்.. முதல்வர் ஸ்டாலின் சிக்ஸர்.

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2021, 2:47 PM IST
Highlights

அதனால் அவர் சொன்னதை தாண்டி நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதியும், மதமும் தடை என்று சொன்ன அயோத்திதாசர், மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவர் எவரோ அவர்தான் மனிதர் என்று முழங்கினார்

.

அயோத்திதாசர் அவர்களின் 175வது ஆண்டு விழாவின் நினைவாக வடசென்னை பகுதியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு செய்தார். இதுகுறித்து அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை பின்வருமாறு:- திருவள்ளுவர், அவ்வையார், கபிலர், வள்ளலார் வரிசையில் தமிழ் சிந்தனை மரபை வளர்த்தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்திதாசர் பண்டிதர் அவர்களின் பெருமையை போற்றக்கூடிய அறிவிப்பு ஒன்றை 110 விதியின் கீழ் இந்த மாமன்றத்தில் எடுத்து வைப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். தமிழ்நாட்டு அரசியலை பொருத்தவரையில் இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது ஒன்று தமிழன், இன்னொன்று திராவிடம். 

இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாள சொல்லாக மாற்றியவர், அறிவாயுதம் ஏந்தியவர்தான் அயோத்திதாச பண்டிதர் அவர்கள். 1886ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பூர்வ தமிழர் என்று  பதியச் சொன்னவர் பண்டிதர் அவர்கள், 1893 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் திராவிட மகாஜன சபை என்பதாகும், 1907ஆம் ஆண்டு ஒரு பைசா தமிழன் என்ற இதழைத் தொடங்கி அதையே தமிழன் என்ற இதழாக நடத்தி வந்த வரலாறு, பூர்வீக சாதி பேதமற்ற திராவிடர்கள் என்று அழைத்தவர் அவர். அதனால்தான் தமிழன் திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அறிவாயுதமாக அவர் எழுதினார் என்று குறிப்பிட்டேன். அவர் போட்டுக் கொடுத்த பாதையில் தான் தமிழ்நாட்டு அரசியல் செயல்பட்டு வருகிறது. 

எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிக்கையாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப்புலவர், புதிய கோட்பாட்டாளர், சிறந்த செயற்பாட்டாளர், போராளி என பன்முக ஆற்றலை கொண்டவர்தான் அயோத்திதாச பண்டிதர் அவர்கள், அவரது தாத்தா அவர்கள், தன்னிடம் இருந்த திருக்குறள் ஓலைச்சுவடிகளை திரு எல்லிஸ் அவர்களிடம் கொடுத்து, திருக்குறளை அச்சு பதிப்பாக கொண்டுவந்ததை நினைக்கும்போது, குரலுக்கு அவருடைய குடும்பம் ஆற்றிய தொண்டுக்கு நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும். தந்தை பெரியார் அவர்களே என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்த கருத்துக்களுக்கும் முன்னோடி அயோத்திதாச பண்டிதர் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அதனால் அவர் சொன்னதை தாண்டி நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதியும், மதமும் தடை என்று சொன்ன அயோத்திதாசர், மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவர் எவரோ அவர்தான் மனிதர் என்று முழங்கினார்.1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசர் அவர்களுடைய  175வது ஆண்டு விழாவின் நினைவாகவும், அவரது அறிவை வணங்கும் விதமாகவும் வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதில் இந்த அரசு பெருமைப்படுகிறது. மகான் புத்தரை இரவு பகலற்ற ஒளி என்று சொன்ன அயோத்திதாச பண்டிதர் அவர்களுடைய சிந்தனைகளும் இரவு பகலற்ற ஒளியாக இந்த தமிழ்ச் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்று சொல்லி அமர்கிறேன். என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

click me!