’இஸ்லாமியர்களையும் தலித் மக்களையும் இழிவுபடுத்துவதா?’...கேந்திர வித்யாலயா நிர்வாகத்திற்கு வைகோ கடும் கண்டனம்...

By Muthurama LingamFirst Published Sep 7, 2019, 2:49 PM IST
Highlights

சிறுபான்மை மக்களையும், தலித் மக்களையும் இழிவுபடுத்தி, பள்ளி மாணவர்களின் இளம் நெஞ்சில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தியுள்ளதாக  கேந்திர வித்யாலயா நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்  மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ.


சிறுபான்மை மக்களையும், தலித் மக்களையும் இழிவுபடுத்தி, பள்ளி மாணவர்களின் இளம் நெஞ்சில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தியுள்ளதாக  கேந்திர வித்யாலயா நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்  மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கேந்திரிய வித்யாலயாவின் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட ஒரு பக்கம் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அதில், தலித் என்றால் யார் என்ற கேள்விக்கு சரியான பதில் ''தீண்டத்தகாதவர்கள்'' என்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, பொதுவாக முஸ்லிம்களின் பண்பு என்ன என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்விக்கு 1) முஸ்லிம்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள், 2) அவர்கள் சைவ உணவு பழக்கத்தினர், 3) அவர்கள் நோன்பு இருக்கும் காலங்களில் எப்போதும் தூங்குவதில்லை, 4) இவையனைத்தும் என நான்கு தெரிவுகள் கொடுக்கப்பட்டிருந்தன.

இக்கேள்வித்தாள்கள் கடந்த இரு தினங்களாக பகிரப்பட்டு கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகிவரும் நிலையில் இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,...மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான சிந்தனையை பிஞ்சு உள்ளங்களில் விதைக்கும் வகையில் இடம்பெற்று இருக்கின்றன.

டாக்டர் அம்பேத்கர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்? முஸ்லீம்கள் யார்? தலித் என்றால் என்ன? தலித் தலைவர் யார்? என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன. தலித்துகள் என்பதன் பொருள் என்ன? கேள்விக்கு விடையாக “அந்நியர்கள், தீண்டத்தகாதவர்கள்,நடுத்தர வர்க்கத்தினர், உயர் வகுப்பினர்” என்று பதில் தரப்பட்டுள்ளது. இந்த நான்கில் ஒன்றை மாணவர்கள் பதிலாக குறிப்பிட வேண்டும்.

இதே போன்று பொதுவாக முஸ்லிம்களின் பண்பு என்ன? என்ற கேள்விக்கு, “முஸ்லிம்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள், நோன்பு காலங்களில் தூங்குவதில்லை” என்று பட்டியல் தரப்பட்டுள்ளது. டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் எந்த சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்ற கேள்விக்கு, “பணக்காரர், ஏழை, தலித், பொருளாதாரம்” என்று 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.சிறுபான்மை மக்களையும், தலித் மக்களையும் இழிவுபடுத்தி, பள்ளி மாணவர்களின் இளம் நெஞ்சில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தி உள்ள கேந்திர வித்யாலயா நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், வினாத்தாள்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’என்று தெரிவித்துள்ளார்.
 

click me!