கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டிடிவி தினகரனின் அமமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த கரூர் செந்தில் பாலாஜி, தனது ஆதரவாளர்கள் பட்டாளத்தோடு திமுகவில் இணைந்தார். அவர் இணைந்த நேரமோ என்னவோ தினகரனின் கட்சினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
அதேபோல, செந்தில் பாலாஜியும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை திமுகவில் இணைக்க காய் நகர்த்தி வருகிறார். அதிலும் குறிப்பாக திமுக வீக்கான இடங்களில் மாற்று கட்சியில் இருக்கும் பவர் ஃ புல்லான கை களை தட்டி தூக்கி வருகிறது சபரீசன் டீம்.
அதன் முதல் முயற்சியாக டிடிவி தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த கோவை தெற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவர் பொன்மலை குமாரசாமி திமுகவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து தினகரனின் அமமுக-வின் மதுரை வடக்கு மாவட்டம் - திருப்பரங்குன்றம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வி.வேட்டையன் தலைமையில், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பி.முத்துமாரி, கிளைச் செயலாளர் முருகன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வின்போது, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர், பி.மூர்த்தி மற்றும் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் ஆகியோர் இருந்தனர்.