இனியும் நாடகம் போடாதீங்க... துரோகம் பண்ணாதீங்க... ‘நீட்’ விவகாரத்தில் முதல்வரை கிழித்துதொங்கவிட்ட மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Aug 14, 2019, 8:26 PM IST
Highlights

“விளக்கம் கேட்கிறோம்” என்ற போர்வையில் கடிதங்களை எழுதி, அதிமுக அரசு திட்டமிட்டு காலதாமதம் செய்துவருகிறது. மத்திய பா.ஜ.க அரசுடன் நீட் விவகாரத்தில் ஒத்திசைந்து போக வேண்டும் என்பதற்காக, தமிழக சட்ட மன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை நீர்த்துப் போக வைக்கவே முதல்வர் பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சரும் “கடித நாடகத்தை” அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
 

“கடிதம் எழுதுகிறோம்” என்ற நாடகத்தை இனியும் தொடராமல், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களை  தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:


நீட் மசோதாக்களுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதையுமே எடுக்காமல், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை, சதி எண்ணத்துடன் பாழ்படுத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தத் துரோகத்தை இளைஞர் சமுதாயம் அறவே மன்னிக்காது. தமிழக சட்டப்பேரவையில் இரண்டு நீட் மசோதாக்கள் ஏகமனதாக, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. 
அந்த மசோதாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திரும்பி வந்து விட்டன என்ற உண்மையை பேரவைக்கும், பேரவையின் மூலமாக நாட்டுக்கும், தெரிவிக்காமல் மறைத்தார் முதல்வர். ‘நீட் மசோதாக்களை மீண்டும் அவையில் நிறைவேற்றி, அனுப்பி வைத்து மத்திய பா.ஜ.க அரசை சங்கடப்படுத்தக் கூடாது என்ற உள் நோக்கத்துடன், “விளக்கம் கேட்கிறோம்” என்ற போர்வையில் கடிதங்களை எழுதி, அதிமுக அரசு திட்டமிட்டு காலதாமதம் செய்துவருகிறது. மத்திய பா.ஜ.க அரசுடன் நீட் விவகாரத்தில் ஒத்திசைந்து போக வேண்டும் என்பதற்காக, தமிழக சட்ட மன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை நீர்த்துப் போக வைக்கவே முதல்வர் பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சரும் “கடித நாடகத்தை” அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


முதலமைச்சர் அவையில் கொடுத்த உறுதிமொழியைக் கூட உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் இருப்பது, நீட் மசோதாக்களை மீண்டும் அவையில் நிறைவேற்றும் மன நிலையில் அதிமுக அரசு இல்லை என்பதையும், நீட் பிரச்சினையை மூடிமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தெளிவாக்குகிறது. சமூக நீதியின் குரல்வளையை நெறிக்கும் விதத்தில் நீட் தேர்வைக் கொண்டு வந்து, ஏழை - நடுத்தர கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் மருத்துவக் கனவுகளையும் சிதறடித்துள்ள மத்திய பா.ஜ.க. அரசுக்கு அ.தி.மு.க அரசு முழுக்க முழுக்க உடந்தையாக இருக்கிறது.


நீட் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய பா.ஜ.க. அரசின் செயலுக்கு எடப்பாடி பழனிசாமியும், விஜயபாஸ்கரும் துணை போயிருக்கிறார்கள். தங்களின் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நீட் மசோதாக்களை பலி கொடுத்து - தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளார்கள். இருவரின் துரோகச் செயலை தமிழகம் ஒரு போதும் மன்னிக்காது.
“கடிதம் எழுதுகிறோம்” என்ற நாடகத்தை இனியும் தொடராமல், ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் அவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பி வைத்துவிட்டு சும்மா இருக்காமல், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துக்கொண்டு பிரதமரைச் சந்தித்து நேரில் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!