அதிமுக உறுப்பினர் அட்டையை கிழித்துவிட்டதாக ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய அதிமுக தொண்டர்.. ஸ்டாலின் பரவசம்!

By Asianet TamilFirst Published May 1, 2020, 8:42 PM IST
Highlights

“‘ஒன்றிணைவோம் வா’ மூலம் உதவி பெற்ற பல லட்சம் பயனாளிகளில் ஒருவரான ஈரோட்டைச் சேர்ந்த கு.தங்கராஜ் என்னும் அ.தி.மு.க உறுப்பினர் அனுப்பியுள்ள நெகிழச் செய்யும் கடிதம் இது. ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டமே சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி உதவுவதுதான். திமுகவின் இத்தொண்டு என்றும் தொடரும்!” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

அதிமுகவின் உறுப்பினர் அட்டையைக் கிழித்துவிட்டேன் என்று ஈரோட்டைச் சேர்ந்த அதிமுக தொண்டர் எழுதிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில்  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக மே 4 முதல் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை திமுக அறிவித்தது. இத்திட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ள எண்ணுக்கு அழைப்போருக்கு உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும் தினந்தோறும் லட்சம் பேருக்கு 25 நகரங்களில் உணவு வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.


இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு கடித்தத்தை பகிர்ந்திருந்தார். மேலும் ட்விட்டர் பதிவில், “‘ஒன்றிணைவோம் வா’ மூலம் உதவி பெற்ற பல லட்சம் பயனாளிகளில் ஒருவரான ஈரோட்டைச் சேர்ந்த கு.தங்கராஜ் என்னும் அ.தி.மு.க உறுப்பினர் அனுப்பியுள்ள நெகிழச் செய்யும் கடிதம் இது. ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டமே சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி உதவுவதுதான். திமுகவின் இத்தொண்டு என்றும் தொடரும்!” எனத் தெரிவித்துள்ளார்.


அந்தக் கடித்தத்தில், “உயர்திரு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, ஈரோடு மாவட்டத்திலிருந்து கு.தங்கராஜ் ஆகிய நான் மரியாதையுடனும், வணக்கத்துடனும் எழுதிய வாழ்த்து மடல். தாங்கள் செய்த ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தில் பலன் அடைந்தவர்களில் நானும் ஒருவன். நான் ஒரு அ.தி.மு.க உறப்பினர். ஆனால் தற்போது அதைச் சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த அரசு மக்கள் கஷ்டப்படும்போது கை கொடுக்க முடியாத அரசாக உள்ளது.
வெறும் ஆயிரம் ரூபாய், ரேஷன் அரிசி, இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? நீங்கள் கூறிய ரூ. 5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. இந்தக் கட்சியில் இருந்ததற்காக வெட்கப்பட்டு, உறுப்பினர் அட்டையை கிழித்துவிட்டேன். இனி என் வழி தளபதி வழியாக. ஈரோடு மாவட்ட செயலாளர் அவர்களின் கீழ் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு தங்களின் அனுமதியும் ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன்” என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

click me!