5,8 பொதுத் தேர்வு ரத்து... திடீர் ஞானதோயத்தில் உறுதியா இருப்பீங்களா..? அதிமுக அரசை கிண்டலடித்த ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Feb 5, 2020, 10:25 AM IST
Highlights

“பிஞ்சுப் பருவத்திலேயே மாணவர்களின் கல்வி உரிமையைப் பறித்து, அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடக்கம் முதலே கடுமையாக வலியுறுத்தியது திமுக. டெல்லி எஜமானர்களின் கைப்பாவையாக உள்ள அதிமுக ஆட்சியாளர்கள் அதற்குச் செவிமடுக்க மறுத்து அமைதி காத்தது மட்டுமின்றி - ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பொதுத்தேர்வு உண்டு என அரசாணை பிறப்பித்தனர்."

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், “இதிலாவது தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும்.” என்று அதிமுக அரசுக்கு அட்வைஸ் செய்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இது பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர்.
என்றாலும். இந்த உத்தரவை திரும்ப பெறப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் செங்கோட்டையன். எனவே 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என உறுதியாக எதிர்பார்க்கப்பட்டது. பொதுத்தேர்வுக்கு அரசியல் கட்சிகளைத்தாண்டி பெற்றோர்களும் மாணவர்களுமே எதிர்ப்பு தெரிவித்ததால், பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக  தமிழக அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பில், “மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின்  கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பழைய நடைமுறைபடியே தேர்வு நடத்தப்படும்” செங்கோட்டையன்  தெரிவித்தார். செங்கோட்டையனின் இந்த அறிவிப்புக்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் பதில்  தெரிவித்துள்ளார்.
அதில், “பிஞ்சுப் பருவத்திலேயே மாணவர்களின் கல்வி உரிமையைப் பறித்து, அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடக்கம் முதலே கடுமையாக வலியுறுத்தியது திமுக. டெல்லி எஜமானர்களின் கைப்பாவையாக உள்ள அதிமுக ஆட்சியாளர்கள் அதற்குச் செவிமடுக்க மறுத்து அமைதி காத்தது மட்டுமின்றி - ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பொதுத்தேர்வு உண்டு என அரசாணை பிறப்பித்தனர்.
தற்போது திடீர் 'ஞானோதயம்' ஏற்பட்டது போல பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளனர். இதிலாவது தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கைக்கு அதிமுக அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து மாநிலத்தின் கல்வி உரிமையை நிலை நாட்டிட வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!