2021 தேர்தல் வரை திமுகவில் மா.செ.க்கள் மாற்றமில்லை... வெற்றிக்காக மு.க. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

By Asianet TamilFirst Published Jun 22, 2020, 8:49 PM IST
Highlights

2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை மாவட்ட செயலாளர்கள் யாரும் மாற்றப்படமாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிவித்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தந்த மாவட்டங்களில்  தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்று  தர வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 

திமுகவில் மாவட்ட செயலாளர்களை சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை மாற்றப் போவதில்லை என்று அக்கட்சியின்  தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு உள்பட உட்கட்சித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கரூர், நாமக்கல், சேலம் உள்பட 7 மாவட்டச் செயலாளர்களை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கினார். எந்த மாவட்ட செயலாளர் மீதாவது அதிருப்தி ஏற்பட்டால், கருணாநிதி காலத்தில் அந்த மாவட்ட செயலாளரை நீக்கமாட்டார்கள். உட்கட்சி தேர்தல் நடக்கும் வரை பொறுப்பில் நீடிக்கவிட்டு, பின்னர் தேர்தல் மூலம் கழற்றிவிடுவார்கள். ஆனால், உட்கட்சித் தேர்தல் வரை காத்திருக்காமல் மு.க. ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட்டு, அந்த மாவட்டங்களில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
ஆனால், அண்மை மாதங்களாக எந்த மாவட்டச் செயலாளர்களையும் பொறுப்பிலிருந்து திமுக தலைமை நீக்கவில்லை. ஆனாலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்களோ என்ற அச்சம் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் மத்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு காணொளி காட்சி மூலம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியபோது, 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை மாவட்ட செயலாளர்கள் யாரும் மாற்றப்படமாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிவித்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தந்த மாவட்டங்களில்  தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்று  தர வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 
திமுக பொதுச்செயலாளர் பதவியே தேர்தலுக்குப் பிறகு நிரப்பிக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாக நாட்கள் உள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்களை மாற்றி, கட்சிக்குள் தேவையற்ற உட்கட்சி பூசலுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்துவிட வேண்டாம் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட செயலாளர்கள் யாரும் மாற்றப்படமாட்டார்கள் என்று ஸ்டாலின் கூட்டத்தில் அறிவித்ததால், நிம்மதி அடைந்துள்ளனர் அக்கட்சி மா.செ.க்கள். இனி பயமின்றி தேர்தலில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்றும் கட்சி தலைமையிடம் மாவட்ட செயலாளர்கள் உறுதியளித்துவிட்டு வந்துள்ளனர் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.

click me!