பெரியப்பாவுக்கு பாடிகார்டா வருவேன்னு சொன்னாயே யாழினி... எங்களை விட்டு போயிட்டியே... கண்ணீர் விட்டு கதறிய தொல்.திருமாவளவன்..!

By vinoth kumarFirst Published Jan 12, 2020, 11:11 AM IST
Highlights

பெரியபெண்ணாக வளர்ந்து நான் பெரியப்பாவுக்குப் ‘பாடிகார்டாக’ பாதுகாப்புக்குச் செல்வேன்” என்று யாழினி சொன்னதாக, யாழினியின் தமக்கை கவினி கூறியபோது என் கண்கள் கலங்கின. கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. சிந்தும் கண்ணீர்ப்பூக்களால் அன்புமழலை யாழினிக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

பெரியப்பாவின் மடியிலமர்ந்து படமெடுக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு பேராவலுடன் பெற்றோருடன் துள்ளியோடிவந்த குழந்தை யாழினிக்கு இப்படியொரு சாவா?அந்தப் பிஞ்சுமழலையின் சாவு நெஞ்சைப் பிழிகிறது தொல்.திருமாவளவன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜனவரி 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஊமச்சிகுளம் அருகே உள்ள எருக்கலைநத்தம் கிராமத்தில் கார்வண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் எழிலரசி. இவர் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தென்னமரத்து சின்னத்தில் போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். 

இதனையடுத்து, திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ளார். மதுரையில் இருப்பதை அறிந்துகொண்டபின் கார்வண்ணன் தன் குடும்பத்தினருடன் அவரை அழைத்து கொண்டு சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குழந்தை யாழினி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். தன்னை பார்க்க வந்து விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து உடனடியாக திருமாவளவன் மருத்துவமனைக்கு விரைந்தார். பின்னர், சிகிச்சை பலனின்றி சிறுமி யாழினி உயிரிழந்தார். அவரது மறைவு திருமாவளவனை ரொம்பவே காயப்படுத்தியது. 

இதுதொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகேயுள்ள எருக்கலைநத்தம் கிராமத்தைச்சார்ந்த முன்னணி தோழர் தம்பி கண்ணன் என்கிற கார்வண்ணன் அவர்களின் மனைவி திருமதி எழிலரசி அவர்கள் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விசிக வேட்பாளராக தென்னை மரச்சின்னத்தில் போட்டியிட்டு மதுரை மேற்கு ஒன்றியக்குழு உறுப்பினராக வெற்றிப்பெற்றார். இது அவர் இரண்டாவது முறையாக பெறும் வெற்றியாகும்.

ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் வெற்றி பெற்ற உறுப்பினர்களை எங்கோ ஓரிடத்திற்கு அழைத்துச்சென்றுள்ள நிலையில், அவ்வாறு எங்கும் செல்லாமல், மதுரைக்கு சென்ற என்னைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக வந்தவழியில், சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் காத்திருக்கும்போதுதான் வேதனைமிக்க அந்த விபத்து நேர்ந்துள்ளது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஒருபுறத்திலிருந்து இன்னொருபுறம் சாலையைக் கடந்து வரும்போது, அதிவேகமாக மதுரையை நோக்கிச்சென்ற தனியார் வண்டியொன்று தம்பி கார்வண்ணன் மீது பலமாக மோதியுள்ளது. அப்போது ஏற்பட்ட பேரதிர்வில் தம்பி கார்வண்ணன் இடுப்பிலிருந்த குழந்தை யாழினி, அவர் பிடியிலிருந்து சிதறி சிலஅடி தூரம் மேலேதூக்கி எறியப்பட்டு தரையில் வீழ்ந்துள்ளது. அதனால் யாழினியின் தலையில் பலத்த அடிபட்டு மூளைக்காயம் ஏற்பட்டதில் உள்ளேயே பெரும் இரத்தக்கசிவு உருவாகியுள்ளது. 

மண்டையோட்டில் வெளிக்காயம் இல்லை. ஆனால், உள்ளே மூளையில் கடுமையான சேதம். உடனே அறுவை செய்து உயிரைக் காப்பாற்ற இயலாத அளவுக்கு நாடித்துடிப்பு வெகுவாகக் குறைந்து சுயநினைவற்ற நிலைக்குப்போய்விட்டது. பத்து நிமிடங்களில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து தந்தையும் குழந்தையும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கே சென்று பார்த்தேன். கார்வண்ணனின் இடுப்பெலும்பில் பலத்த அடி. இலேசான கீறல் உடைவு. எனினும் உயிருக்கு ஆபத்தில்லை என்பது சற்று ஆறுதல். 

மழலை யாழினியைக் காப்பாற்ற வாய்ப்பில்லையென மருத்துவர்கள் கையைவிரித்து விட்டனர். யாழினியின் கண்களில் ஒளியில்லை. உடலில் கொஞ்சமும் அசைவில்லை. தொட்டுப்பார்த்ததில் துளியும் வெப்பமில்லை. ஆக்சிஜன் கருவிமூலம் செயற்கை சுவாசம் இருந்தது. எனினும் மேலும் முயற்சிக்கவும் என்று மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டேன். 

மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் பின்னர் இராஜாஜி மருத்துவமனையிலும் குழந்தையைக் காற்றுவதற்குப் போராடியும் இயலாமற்போய்விட்டது. “பெரியப்பாவின் மடியிலமர்ந்து படமெடுக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு பேராவலுடன் பெற்றோருடன் துள்ளியோடிவந்த குழந்தை யாழினிக்கு இப்படியொரு சாவா?அந்தப் பிஞ்சுமழலையின் சாவு நெஞ்சைப் பிழிகிறது.

“பெரியபெண்ணாக வளர்ந்து நான் பெரியப்பாவுக்குப் ‘பாடிகார்டாக’ பாதுகாப்புக்குச் செல்வேன்” என்று யாழினி சொன்னதாக, யாழினியின் தமக்கை கவினி கூறியபோது என் கண்கள் கலங்கின. கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. சிந்தும் கண்ணீர்ப்பூக்களால் அன்புமழலை யாழினிக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

click me!