தமிழக அரசியல் கட்சிகளிடம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்து கட்சியினரின் கருத்துக்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
காவிரிநதிநீர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க தமிழக முமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக, மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள், அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் பங்கேற்றனர்.
காவிரி விவகாரத்தில் அரசு தொடர் நடவடிக்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் எடுக்க அனைவரது ஆலோசனைகளும் தேவை. அனைத்து கட்சி தலைவர்கள் தங்களது ஆலோசனையை வழங்க வேண்டும் என்று அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.
அப்போது பேசிய திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரததில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் திமுக துணை நிற்கும் என்றார். நீர்ப்பாசனத்தைப் பொதுப்பணி துறையில் இருந்து பிரித்து புதிய அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்றார். நீர் பாதுகாப்பு ஆணையம் அமைத்து நீர்வளத்தை சேமிப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்
தேவை. குறைக்கப்பட்டுள்ள 14 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை யோசிக்க வேண்டும் என்று அப்போது தெரிவித்தார்.
பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, காவிரி நதிநீர் பிரச்சனை, ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளுடன் பின்னிப்பிணைந்த ஒன்று. அதனால், காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சியினரிடமும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழக உரிமைகளை நிலைநாட்ட ஒன்றாக இணைந்து பாடுபடுவோம் என்று உறுதி அளித்துள்ளார்.