காலைவாரும் வாரிசு... கவிழ்க்கத் துடிக்கும் குறுநில மன்னர்... திமுகவில் குஸ்தி..!

By Thiraviaraj RMFirst Published Feb 12, 2021, 12:45 PM IST
Highlights

திருச்சி மாவட்ட திமுகவில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் இருவரிடையேயும் யார் பெரியவர் என்னும் அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.

திருச்சி மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ் தற்போது திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். அங்கு அவருக்கு எதிராக திமுகவில் உள்ளடி வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதனால், அன்பில் மகேஷ் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். இதற்கு உதயநிதியும் ஓகே சொல்லிவிட்டாராம்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்பதால் ஐபேக் டீம் திருவெறும்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே அன்பில் மகேசின் இமேஜை மேம்படுத்துவதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்து அவர் இந்த இரண்டு தொகுதியில் எதில் நிறுத்தப்பட்டாலும், அதில் வெற்றி பெற வைத்துவிடவேண்டும் என்பதற்காக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறதாம். 

திருச்சி மாவட்ட திமுகவில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் இருவரிடையேயும் யார் பெரியவர் என்னும் அதிகாரப் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த பிரச்சனையும் அங்கு பூதாகரமாக வெடித்துள்ளது. தளபதி ஸ்டாலின் மகனின் நண்பர் என்பதற்காக அன்பில் மகேஷ்க்கு இப்படியெல்லாம் சலுகை காட்டுவது கொஞ்சம் ஓவர்தான் என்று திருச்சி மாவட்ட திமுக உடன்பிறப்புகள் புலம்புகின்றனர்.

ஏனென்றால் அன்பில் மகேசின் தந்தை அன்பில் பொய்யாமொழி திமுகவில் எம்எல்ஏவாக இருந்தவர். ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பர். பொய்யா மொழியின் தந்தை யார் தெரியுமா? அன்பில் தர்மலிங்கம். 1971ல் கருணாநிதியின் அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்தவர். கருணாநிதியின் நெருங்கிய நண்பர்.

click me!