
கர்நாடக முதல்வராக நாளை மதியம் 2 மணிக்கு பதவியேற்க உள்ள குமாரசாமி, நாளை மறுநாளே பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை அறிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமலே கடந்த சனிக்கிழமை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இதையடுத்து காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியமைக்க குமாரசாமிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.
குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் மஜத இடையே அதிகார பகிர்வு குறித்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இன்று அவை இறுதி செய்யப்பட்டுவிடும். நாளை மதியம் 2 மணிக்கு குமாரசாமி, கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார். கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில், மேற்கு வங்கம் உட்பட பல மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
நாளை முதல்வராக பதவியேற்கும் குமாரசாமிக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார். ஆனால், மறுநாளே பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குமாரசாமியும் ஏற்கனவே இந்த தகவலை தெரிவித்திருந்தார்.
ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாதபோதும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில், முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவிற்கும் ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார். ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அது முடியாது என்ற நிலை உருவானதும், எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், குமாரசாமி முதல்வராக பதவியேற்ற மறுநாளே பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளார்.