குஷ்புவால் சில நாட்களுக்கு இதை மட்டும் செய்யமுடியும்..!! ரகசியத்தை பகிரங்கப்படுத்திய அழகிரி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2020, 3:04 PM IST
Highlights

 திருமதி குஷ்பு சுந்தர் சி அவர்கள் பாஜகவில் சேருவதற்கு அவரது கணவர் திரு சுந்தர் சியின்   நிர்பந்தம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்த திருமதி குஷ்பு மூளைச்சலவை செய்யப்பட்டு இன்று அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட பாஜகவில் இணைந்து இருக்கிறார்.

குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகியதால் காங்கிரஸ் கட்சிக்கோ நஷ்டமோ அல்லது அவர் பாஜகவில் சேர்வதால் பாஜகவுக்கோ லாபமோ ஏற்படப்போவதில்லை, ஒரு சில நாட்களுக்கு ஊடகங்களுக்கு குஷ்புவால் தீனி போட முடியுமே தவிர அவர் எந்த வகையிலும் யாருக்கும் எந்த பயனும் தரப் போவதில்லை என  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: 

திருமதி குஷ்பு சுந்தர் பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகளாக இருந்தன. அது இன்று உறுதி செய்யப்பட்டு சேரப்போகிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த திருமதி குஷ்பு அவர்களுக்கு தேசிய செய்தி தொடர்பாளர் என்ற மிக உயர்ந்த பொறுப்பு தரப்பட்டு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது கட்சி ஈடுபாடு மிக மிக குறைவாகவே இருந்தது. இந்நிலையில் அவரை நேரில் சந்தித்து பேசினேன், அப்போது இனி நான் மிகுந்த ஈடுபாட்டோடு கட்சி பணியாற்றுவதாக நன்றி கூறினார். 

கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி வேளாண் சட்டங்களை எதிர்த்து தினேஷ் குண்டுராவ் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் திருமதி குஷ்பு அவர்களும் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு பெரம்பூரில் நடைபெற்ற தலித் பெண் பாலியல் வன்கொடுமை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தலைநகர் டெல்லிக்கு பயணமான போது சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்தார். திருமதி குஷ்பு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு கே.சி வேணுகோபால் அவர்களைச் சந்திக்கப் போவதாக கூறிய அவர், காங்கிரஸ் கட்சியின் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பாஜகவில் சேரப்போவதாக அந்த கட்சியினர் ரூபாய் 2 வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜகவில் சேருவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை என மறுத்தார். ஐந்து நாட்களுக்கு முன்பு பாஜகவை விமர்சனம் செய்த திருமதி குஷ்பு, ஆறாவது நாள் பாஜகவில் சேருவதற்கு ஏன் முடிவெடுத்தார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

திருமதி குஷ்பு சுந்தர் சி அவர்கள் பாஜகவில் சேருவதற்கு அவரது கணவர் திரு சுந்தர் சியின்   நிர்பந்தம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்த திருமதி குஷ்பு மூளைச்சலவை செய்யப்பட்டு இன்று அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட பாஜகவில் இணைந்து இருக்கிறார்.இதன்மூலம் நீண்ட காலமாக அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையை பாஜகவிடம் அடமானம் வைத்திருக்கிறார்.திருமதி குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் எத்தகைய பாதிப்பும் ஏற்படப் போவதில்லை, இவரைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் மேடை அமைந்தால் அதில் பேசிவிட்டு விளம்பரம் பெறக்கூடியவர் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்திடும் பணியில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாதவர்.

அவர் கட்சியை விட்டு விலகுவதினால் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித நஷ்டமும் இல்லை, அதேபோல பாஜகவில் சேர்வதனால் எந்த லாபமும் அந்த கட்சிக்கு ஏற்படப்போவதில்லை. சில நாட்களுக்கு ஊடகங்களுக்கு குஷ்புவால் தீனி போட முடியும், அதைத் தவிர குஷ்புவால் எந்த வகையிலும் யாருக்கும் எந்த பயனும் தரப்போவதில்லை இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!