இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டு, தப்பிக்க நினைக்கும் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன்..! முன் ஜாமீன் கோரி மனு

By karthikeyan VFirst Published Jul 15, 2020, 7:05 PM IST
Highlights

கந்தசஷ்டி கவசத்தையும் இந்து கடவுள் முருகன் குறித்தும் மிகவும் ஆபாசமாக பேசிய வழக்கில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் நடராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீர் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 
 

கந்தசஷ்டி கவசத்தையும் இந்து கடவுள் முருகன் குறித்தும் மிகவும் ஆபாசமாக பேசிய வழக்கில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் நடராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீர் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 

மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்பவர்கள், இந்து மத நம்பிக்கைகளை மட்டும் சீண்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்துவருகிறது. அந்தவகையில், கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல், இந்து மத கடவுள்களை கிண்டலடிப்பதற்காக மட்டுமே நடத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த சில தினங்களாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் குறித்த சர்ச்சையும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. 

இந்நிலையில், இந்து மத கடவுள் முருகன் மற்றும் கந்தசஷ்டி கவசம் குறித்து அந்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சுரேந்திரன் நடராஜன் என்பவர் அருவெறுத்தக்க வகையிலும் ஆபாசமாகவும் பேசினார். மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள் என்ற போர்வையில், இதுமாதிரி சிலர், இந்து மதத்தை மட்டும் டார்கெட் செய்து கிண்டலடித்து இந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்திவருகின்றனர். 

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சுரேந்திரனின் அத்துமீறிய ஆபாச பேச்சு, இந்து மதத்தினர் மத்தியிலும் பாஜக மற்றும் இந்து மத அமைப்பினர் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து அமைப்பினர் மட்டுமல்லாது, ஒவ்வொரு இந்துவும், இந்த விவகாரத்தில் குரல் கொடுத்துவருகின்றனர். 

தமிழக பாஜக தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் மீதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சுரேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோக்கள், இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளன., முருகக்கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்தும் மிகவும் அருவெறுக்கத்தக்க ஆபாசமாக, இந்து மதத்தையும் அதன் கடவுள் முருகரையும் அசிங்கப்படுத்தி இந்த யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்துமத தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் இதிகாசங்களையும் புராணங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் ஒருவித அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதனை வெளியிட்ட சுரேந்திரன் நடராஜன் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது சாதி, மத, இன ரீதியான மோதலை தூண்டுவது, அவதூறு பரப்புதல் உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாகியுள்ள சுரேந்திரன் நடராஜனை போலீஸார் தேடிவருகின்றனர். இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட  சுரேந்திரன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் பல்வேறு தகவல்களை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ள சுரேந்திரன், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வெளியிட்ட பதிவு தொடர்பாக 6 மாதத்திற்கு பிறகு ஜூலை 14ஆம் தேதி அளித்த புகாரில் தன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், வலதுசாரி சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றி வருவதால் அதை முடக்கும் நோக்கில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், அந்த வழக்கில் தான் கைதாவதிலிருந்து தவிர்க்க முன் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
 

click me!