
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், ``சாமி, சிங்கம் போன்ற படங்களை பார்த்துவிட்டு அதே போல் சில காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள்.
அவர்களுக்கு உயர் அதிகாரிகள் அட்வைஸ் கொடுக்க வேண்டும். நான் சட்டமன்றத்திலேயே பேசியவன். உங்களுக்கு போதை ஏற்றினால் தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கொலை செய்து விடுவோம் என்று பேசினார்.
மேலும் தமிழக முதலமைச்சரை மேடையில் விமர்சித்த அவர் குறிப்பிட்ட சமுதாயம் குறித்தும் சில விஷயங்களை பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு காவல்துறை வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக காவல்துறை கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை சாலி கிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால் நூற்றுக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருணாசை போலீசார் அழைத்துச் செல்லும்போது செய்தியாளக்கு பேட்டி அளித்த அவர், ஒரு சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால் சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும், அப்படி ஒரு அனுமதியைப் பெற்றார்களா என தெரியவில்லை என கூறினார்.
நான் எனது சமுதாய உரிமை குறித்து தான் பேசினேன். அதற்காக 307 சட்டப் பிரிவில் என் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அரசு திட்டமிட்டு பேச்சுரிமையைப் பறிக்கிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் சிறைச்சாலைகள் எங்கள் சமுதாய மக்களுக்காத்தான் கட்டப்பட்டுள்ளது என்றும், சிறைக்கு செல்வதற்கொல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல என்றும் கருணாஸ் குறிப்பிட்டார். துப்பாக்கி முனைக்கு நெஞ்சை நிமிர்த்திக் காட்டும் சீவலப்பேரி பாண்டி பரம்பரையில் வந்தவன் நான் என்றும் , இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றும் கருணாஸ் தெரிவித்தார்.
தற்போது கருணாஸ் நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.