மரணப் படுக்கையிலும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்திய கருணாநிதி !! காவேரி காமெடி…
உடல் நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் வீட்டிலேயே ஒய்வெடுத்து வந்தார். டந்த மாதம் திடீரென அவருக்கு காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக வீட்டிலேயே அவருக்கு காவேரி மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது கருணாநிதியின் உடல் நிலை மோசமடைந்தது, பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பின் சரியானது. இப்படி மாறி, மாறி உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
பொதுவாக கருணாநிதி நன்கு இயங்கிக் கொண்டிருந்தபோது தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார். நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு அவரது அருகில் இருப்பவர்களை சிரிக்கச் செய்துவிடும்.
இந்நிலையில் தான் காவேரி மருத்துவமனையில் அவர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தார். சீரியசான நிலைமை. ஆனாலும் அந்த இடத்தில் கூட சிலேடையாக பேசி, ஊழிய்களையும், டாக்டர்களையும் சிரிக்க வைத்துள்ளார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று அவரை கவனித்துக் கொண்டிருந்த நர்சுகளுக்கு டாக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
அதனால் தொடர்ந்து கருணாநிதி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டும் டுட்டி நர்ஸ் தண்ணீர் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்த நர்சை அழைத்த கருணநிதி , இத்தனை தடவை தண்ணீர் கேட்டும் நீ கொடுக்கவில்லையே ! உன் பேரென்ன காவேரியா ? என கேட்டு தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
கருணாநிதியின் இந்த நகைச்சுவை உணர்வை காவேரி டாக்டர்களும், ஊழியர்களும் நெகிழ்ச்சியுடன் சிலாகித்துப் பேசி வருகின்றனர்