அப்பன், புள்ளதான் பதவிக்கு வரணுமா..? கருணாநிதி குடும்பத்தை அதிர வைக்கும் பெரியாரின் காதல் வாரிசு..!

By Thiraviaraj RMFirst Published Feb 12, 2021, 12:09 PM IST
Highlights

எங்கள் அண்ணன் சொன்னது சரிதான் என்பதை பொதுச் செயலாளர் துரைமுருகன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

திருவண்ணாமலை தொகுதி திமுகவின் இரும்புக் கோட்டை என்று கருணாநிதி அடிக்கடி பெருமையுடன் கூறுவதுண்டு. சமீபகாலமாக ஸ்டாலினும் அப்படி கூறி வருகிறார். இதனால்தான், திமுக ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களில் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு என்னும் புகார் பெட்டி திட்டத்தையும், கடந்த 29-ம் தேதி முதன் முதலாக திருவண்ணாமலையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ஸ்டாலினுக்கு வலதுகரம். அவருடைய வேண்டுகோளின் படியே இந்த திட்டத்தை திருவண்ணாமலையில் அவர் தொடங்கி வைத்தார் என்றும் கூறுகிறார்கள்.

தற்போது, இந்த திருவண்ணாமலையில் திமுகவுக்கு மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்களின் மகன்கள் எம்எல்ஏக்கள் ஆகவும், எம்பிக்களாகவும் உள்ளனர். இதில் ஒரு சில மாவட்டங்கள் விதிவிலக்காக உள்ளன. அந்த ஒன்றில் இதுவரை திருவண்ணாமலையும் இருந்து வந்தது.

வேலுவின் இரண்டாவது மகன் கம்பன் திமுகவின் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் பதவி வகிக்கிறார். அவருக்கு திருவண்ணாமலை அருகில் உள்ள தொகுதியான கலசபாக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பு சில மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. கலசபாக்கம் திமுக பல முறை வென்ற தொகுதி. ஆனால், கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களாக இந்த தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்குவதையே திமுக வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் வரும் இங்கு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடவேண்டும் என்று உள்ளூர் நிர்வாகிகள் கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்துதான் கலசபாக்கம் தொகுதியை நிர்வகிக்கும் பொறுப்பை திமுக தலைமை வேலுவின் மகன் கம்பனிடம் ஒப்படைத்தது. ஆனால், வேலுவின் தலையீடு காரணமாகத்தான் அவருடைய மகனுக்கு இந்த பொறுப்பு கிடைத்ததாக கலசபாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் புலம்பி வந்தனர்.
 
இந்நிலையில், கம்பனும் கலசபாக்கம் தொகுதி முழுவதும் தனக்கென்று தனி செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். அதனால் அவருடைய ஆதரவாளர்கள் கலசபாக்கம் தொகுதியை கம்பனுக்கே ஒதுக்கவேண்டும் என்று திமுக மேலிடத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீமும் அவரையே இத் குதியில் வேட்பாளராக நிறுத்தலாம் என்று கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது கலசபாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்க நினைத்திருந்த உள்ளூர் திமுக நிர்வாகிகள் இடையே கடும் சலசலப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதை மனதுக்குள்ளேயே போட்டு பலர் புலம்பினாலும், ஒருவர் மட்டும் தனது ஆதங்கத்தை இளைஞரணி நிர்வாகி ஒருவரிடம் செல்போனில் பேசும்போது, மனம் திறந்து அப்படியே கொட்டி தீர்த்துவிட்டார். அதை பதிவு செய்திருந்த இளைஞரணி நிர்வாகி சமூக ஊடகங்களில் பரவ விட, தற்போது திருவண்ணாமலை திமுக மட்டுமல்ல, மாநில திமுகவே அதிர்ந்து போயிருக்கிறது.

திமுக இளைஞர் அணி நிர்வாகியுடன் போனில் பேசியவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன். இவர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளர் என்பதுதான் இதில் விசேஷம். “கட்சியில் 45 வருடங்களாக இருக்கிறேன் எ.வ.வேலு மேடையில் பேசும்போது என் பெயரைச் சொல்கிறார். யாரும் கைதட்ட மாட்டேன் என்கிறார்கள். ஆனால் இன்னும் கட்சியில் வந்து ஒன்னும் செய்யவில்லை. அப்பன் நிழலில், பாதுகாப்பில் இருக்கிற வேலுவின் மகன் கம்பன் பெயரைச் சொன்னால் கைதட்டுகிறார்கள். 

மெடிக்கல், என்ஜினீயரிங், ஆர்ட்ஸ் காலேஜ், நிலம், ஸ்பின்னிங் மில், ஆந்திராவில் கிரானைட் கம்பெனி, பைனான்ஸ் வெச்சிருக்கார். இவ்வளவு தொழில் செய்கிறார். அதில் போய் அவரது மகன் கம்பனை வளர்க்கட்டும். கட்சிக்கு வந்து ஏன் மத்தவங்க பிழைப்பை கெடுக்கணும். கட்சியில் அப்பன், புள்ளதான் பதவிக்கு வரணுமா? கலைஞராக இருந்தாலும் சேர்த்துதான் சொல்றேன்” இப்படி முடிகிறது அந்த ஆடியோ பதிவு.

சாவல்பூண்டி சுந்தரேசனின் இந்தப் பேச்சு திமுக தலைமைக்கே சவால் விடுவதுபோல் இருப்பதாக உடன்பிறப்புகள் ஸ்டாலினுக்கு புகார் மனுக்களை தட்டிவிட தற்போது திமுகவில் இருந்து சுந்தரேசன் தற்காலிகமாக நீக்கப்பட்டு இருக்கிறார். திமுகவில் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் உச்சம் பெற்று இருப்பதை திமுக நிர்வாகியின் இந்தப் பேச்சு நேரடியாகவே சுட்டிக் காண்பித்து நறுக்கென்று கொட்டவும் செய்கிறது.

இதுபற்றி சாவல்பூண்டி சுந்தரேசனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், “எங்கள் அண்ணன் சொன்னது சரிதான் என்பதை பொதுச் செயலாளர் துரைமுருகன் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஏனென்றால் அவருடைய மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருக்கிறார். துரைமுருகனோ காட்பாடி தொகுதி எம்எல்ஏ. முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ. அவருடைய மகன் செந்தில்குமார் பழனி தொகுதி எம்எல்ஏ. டி. ஆர்.பாலு எம்பி. அவருடைய மகன் ராஜா எம்எல்ஏ. பொன்முடி எம்எல்ஏயாகவும் அவருடைய மகன் கவுதம சிகாமணி எம்பியாகவும் உள்ளனர். இப்படி கட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அப்பா-மகன் இருவரும் சாம்ராஜ்யம் செய்வதை இந்த உரையாடல் ஊர்ஜிதப்படுத்துகிறது. இதுபோல் இருந்தால் கட்சிக்காக காலங்காலமாக உழைத்தவர்களுக்கு என்ன மரியாதை. கடைசிவரை திமுக தொண்டன் போஸ்டர் ஒட்டிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா என்ன? பண பலம் இருந்தால்தான் எம்எல்ஏ சீட்டு என்றால் காலப்போக்கில் கட்சி காணாமல் போய்விடும்” என்று மன வேதனையுடன் குறிப்பிட்டனர்.

சாவல்பூண்டி சுந்தரேசன் முதல் மனைவி, பிள்ளைகள் உள்ள நிலையில் இவர் 27 வயது ஆராய்ச்சி படிப்பு மாணவி ஒருவரை சில ஆண்டுகளாக மெய்யுருக காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இதுபற்றி அப்போது அவரிடம் கேட்டதற்கு, “பெரியார் செய்தால் சரி, நான் செய்தால் தப்பா?” என்று எதிர் கேள்வி எழுப்பி அனைவரின் வாயையும் அடைத்தவர் என்றும் கூறுவார்கள்.

click me!