
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனவும் பணத்தை கொடுத்தே ஓட்டை விலைக்கு வாங்கியுள்ளனர் எனவும் பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றது.
சசிகலாவே அடுத்த சி.எம் என கூறி வந்த அனைவரும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கி அவரை கட்சியில் இருந்து கழட்டி விட்டனர். டிடிவியை கட்சி உறுப்பினரே இல்லை என கூறி ஓரங்கட்டினர் ஆளுங்கட்சியினர்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலையையும் கட்சியையும் எடப்பாடி பன்னீர் செல்வம் மீட்டனர்.
இதையடுத்து நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இதைதொடர்ந்து இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் 8வது சுற்றின் முடிவில் 20,135 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.
அதாவது டிடிவி தினகரன் 39,548வாக்குகள் பெற்று முன்னிலையிலும் மதுசூதனன் 19, 805வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் திமுக 10,267 வாக்குகள் பெற்று 3 வது இடத்திலும் நாம் தமிழர் கட்சி 1732 வாக்குகள் பெற்று 4 இடத்திலும் உள்ளது.
மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட மிகவும் குறைவான 519 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனவும் பணத்தை கொடுத்தே ஓட்டை விலைக்கு வாங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் வாக்குகளை மீட்டெடுப்போம் எனவும் பணப்பட்டுவாடா செய்தது தெரிந்தும் ஏன் தேர்தலை ரத்து செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.