
கர்நாடக முதல்வராக நாளை குமாரசாமி பதவியேற்க உள்ள நிலையில், அமைச்சரவை ஒதுக்கீடு தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை அறிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமலே கடந்த சனிக்கிழமை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இதையடுத்து காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியமைக்க குமாரசாமிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.
குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை காங்கிரஸ்-மஜத கட்சிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது. மஜத-வை சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவியேற்க உள்ளார். எனவே துணை முதல்வர் பதவி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு வழங்க மஜத தலைவர் தேவெகௌடா ஒப்புக்கொண்டார். அதேநேரத்தில் காங்கிரஸிலிருந்து ஒருவர் மற்றும் மஜதவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் இரண்டு துணை முதல்வர் பதவி வழங்கலாம் என தேவெ கௌடா ஆலோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இரண்டு துணை முதல்வர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரை நியமிக்கலாம் என தேவெ கௌடா கூறியதாக தெரிகிறது.
துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் பரமேஷ்வர், டி.கே.சிவக்குமார், எம்.பி.பாட்டீல் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. 30 முதல் 35 பேர் அடங்கிய அமைச்சரவை அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில், அதிகமான எம்.எல்.ஏக்களை கொண்ட தங்கள் கட்சிக்கு 15 முதல் 20 அமைச்சர்கள் வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேவெ கௌடா, மஜதவிற்கும் 15 முதல் 20 அமைச்சர்கள் வேண்டும் என கோரியுள்ளார். மேலும் மஜத கூட்டணியில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏவும் அமைச்சர் பதவி கோருகிறார்.
அதேபோல, தலித், லிங்காயத், ஒக்கலிகா, இஸ்லாமியர் ஆகிய வகுப்பினர் தங்களுக்கு அமைச்சரவையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே நேற்று டெல்லி சென்ற குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின் அமைச்சரவை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், குமாரசாமி எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. அதனால் இன்றும் தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தையில் அதிகாரப் பகிர்வு குறித்த முடிவுகள் இறுதி செய்யப்படும் என தெரிகிறது.