சென்னைக்கு குடிநீர் கிடைக்க கர்நாடகாவும் காரணம்.. அந்த நன்றி இருக்கா.? தமிழகம் மீது பாய்ந்த கர்நாடக முதல்வர்!

By Asianet TamilFirst Published Mar 22, 2022, 7:04 PM IST
Highlights

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா தண்ணீர் 15 டி.எம்.சி. ஒதுக்கப்பட்டது. இதற்கு கர்நாடகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. 

சென்னைக்கு தற்போது குடிநீர் கிடைக்கிறது என்றால், அதில் கர்நாடகத்தின் பங்கும் உள்ளது. அதை அவர்கள் (தமிழகம்) மறக்கக் கூடாது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு ஏற்கனவே 4 அணைகளை கட்டியிருக்கிறது. இந்நிலையில் தமிழக எல்லையில் மேகேதாட்டுவில் புதிய அணை ஒன்றை கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தமிழக அரசின் அனுமதியின்றியோ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாகவோ காவிரியில் அணை கட்ட முடியாது என்றாலும், மேகேதாட்டுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாகவும் தீவிரமாகவும் உள்ளது. அதன் ஒரு பகுதியாக அணை கட்ட அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் கர்நாடக அரசு மனு அளித்துள்ளது. இதேஒபோல மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

தமிழகம் எதிர்ப்பு

கர்நாடக அரசின் இந்தப் போக்கை கண்டிக்கும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டது. தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. அனைத்துக் கட்சிகளும் கர்நாடகத்தின் செயலை சட்டப்பேரவையில் கண்டித்து பேசின. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தால் கர்நாடக அரசு கோபம் அடைந்தது. அங்குள்ள காங்கிரஸ், மதசார்ப்பற்ற ஜனதாதளம் ஆகிய எதிர்க்கட்சிகளும் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை பேசினார்.

சென்னைக்கு கர்நாடகா உதவி

அப்போது அவர் கூறுகையில், “சென்னை நகருக்கென குடிநீரே இல்லை. முன்பெல்லாம் ரெயில்களில்தான் குடிநீர் கொண்டு சென்றார்கள். சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா தண்ணீர் 15 டி.எம்.சி. ஒதுக்கப்பட்டது. இதற்கு கர்நாடகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. கிருஷ்ணா ஆற்று படுகையில் தமிழகம் இல்லை. என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் குடிநீர் வழங்க கர்நாடகாவும் ஒப்புக்கொண்டது. சென்னைக்கு தற்போது குடிநீர் கிடைக்கிறது என்றால், அதில் கர்நாடகத்தின் பங்கும் உள்ளது. அதை அவர்கள் (தமிழகம்) மறக்கக் கூடாது. ஆனால், அந்த நன்றி உணர்வுகூட தமிழகத்துக்கு இல்லை” என்று பசவராஜ் பொம்மை பேசினார்.

click me!