கர்நாடக மாநிலத்தில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு ஆயிரத்து 195 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்தவர்.
கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு எடியூரப்பா முதலமைச்சரானார். இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் முக்கியமாக செயல்பட்டது காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்). கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள்தான். அவர்கள் ராஜினாமா செய்ததால், ஆட்சி கவிழ்ந்திருந்தது. அந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போது அவர்கள் பாஜகவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் ஒசக்கோட்டை தொகுதியில் எம்.டி.பி.நாகராஜ் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 14-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது மற்றும் தன்னுடைய மனைவி சாந்தகுமாரி பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். அதில், எம்.டி.பி.நாகராஜிக்கு ரூ.1,195 கோடி சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு(2018) கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலின் போது தனக்கு ரூ.1,015 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதன்மூலம் கடந்த 18 மாதத்தில் எம்.டி.பி.நாகராஜின் சொத்து மதிப்பு ரூ.180 கோடி உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்). கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்பு கடந்த ஆகஸ்டு மாதம் 2-ம் தேதியில் இருந்து 7-ந்தேதி வரை மட்டும் எம்.டி.பி.நாகராஜிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் ரூ.48 கோடியே 76 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
.எம்.டி.பி.நாகராஜ் முன்பு இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.