காமராஜிடம் பம்மிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் ! கொடி கட்டிப் பறந்த தமிழன் !!

By Selvanayagam PFirst Published Jul 15, 2019, 11:04 AM IST
Highlights

நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கியதில் பெரும் பங்கு வகித்த காமராஜர், பாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் சிறந்த நண்பராகவும் திகழ்ந்தார். ராஜ் கபூர், தேவ் ஆனந்த், ராஜேந்திரகுமார் போன்ற பிரபல இந்தி நடிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டு காமராஜுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் அவரது பிறந்த நாளான இன்று வைரலாகி வருகிறது

இன்று ஜுலை 15 இந்தியாவின் கிங் மேக்கராக திகழ்ந்த காமராசர் அவர்களின் பிறந்த நாள். தன்னுடைய உழைப்பால்,  அயராத தொண்டால் அரசியல் வாழ்வில் படிப்படியாக உயர்ந்தவர்தான் இந்த  காமராசர். பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை என்றெல்லாம் புகழப்பட்ட காமராஜர் , இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர்.  

1903-ம் ஆண்டு விருதுநகரில் குமாரசாமி மற்றும் சிவகாமியம்மாளுக்கு மகனாக பிறந்தவர் பெருந்தலைவர் காமராசர். 1908ஆம் ஆண்டு ஏனாதி நாராயண வித்யா சாலையில், ஆரம்பக்கல்வியை தொடங்கினார். 

6 வயதில், தனது தந்தை இறந்ததால், பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலைக்கு ஆளான காமராசர், சிறு வயதிலேயே துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். 

1920ம் ஆண்டு தனது 16 வயதில், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரான காமராஜர், ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று 6 முறை சிறைக்கு சென்று 9 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியை அரசியல் குருவாக மதித்த காமராசர், 1953-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். ராஜாஜியால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6,000 பள்ளிகளை திறந்தார். 

மேலும், 17 ஆயிரம் பள்ளிகளை திறந்ததோடு, பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை, எளிய மக்களின் கல்விக்கு அடித்தளமிட்டார். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்வி கற்போரின் எண்ணிக்கை, காமராசர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது. 

கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார் காமராஜர். 1963ம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். 

தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமையப் போவதை பெருமையாக பேசிக் கொள்ளும் நிலையில் பெல் நிறுவனத்தை தமிழகத்தில்கொண்டு வந்தவர் காமராஜ்தான். ஜவஹர்லால் நேரு மறைந்த போது அடுத்த பிரதமர் யார் ? என்ற கேள்வி எழுந்தபோது லால் பகதூர் சாஸ்திரியையும், சாஸ்திரி மறைந்த போது இநதிரா காந்தியையும் அடையாளப்டுத்தியவர் காமராஜ்தான். அந்த இக்கட்டான சூழ்நிலையில் தானே பிரதமராக அவரால் வந்திருக்க முடியும். ஆனாலும் பதவிக்கு ஆசைப்படாத காமராஜர் பிரதமர்களை உருவாக்கி கிங் மேக்கராக் திகழ்ந்தார்.

காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அக்கட்சியை ஒற்றுமையுடன் கட்டிக் காத்தார்.

அரசியலில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் இந்தி திரையுலகிலும் காமராஜர் போற்றப்படத்தக்க தலைவராக திழழ்ந்தார். பிரபலமான இந்தி திரை நட்சத்திரங்கள் காமராஜருடன் நட்பு பாரட்டினார்கள். ராஜ் கபூர், தேவ் ஆனந்த், ராஜேந்திரகுமார் போன்ற பிரபல இந்தி நடிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டு காமராஜுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் அவரது பிறந்த நாளான இன்று வைரலாகி வருகிறது. 

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஒரு சிறந்த அரசியல் ஞானியாக திகழந்த காமராஜர் போன்று ஒரு அரிய அரசியல்வாதியை இனி காண முடியுமா? 

அது தான் காமராஜர்…
 

click me!