திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், அறிவுக்கூர்மை, தமிழ், மக்கள் மீது உள்ள அக்கறை இவை மூன்றையும் மூன்றையும் அவரிடம் கற்றுக் கொண்டதாகவும், தனது கொள்கையில் கண்டிப்பாக திராவிடம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ள நடிகர் கமல் ஹாசன், வரும் 21 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, ஆதரவு திரட்டுவது, மக்களிடம் தனது திட்டங்கள் குறித்து விளக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நடிகர் கமல் ஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அவர் தனது அரசியல் பயணத்தை விரைவில் தொடங்க உள்ள நிலையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு போன்றோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றதோடு, அவர்களிடம் இருந்து அரசியல் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
மேலும் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் விட்டுக்குச் சென்ற கமல்ஹாசன், அவரிடமும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பேசினார்.
இந்நிலையில் கமல், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்குச் சென்றார். அவரை அக்கட்சியில் செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று கருணாநிதியிடம் அழைத்துச் சென்றார். தொடர்ந்து கருணாநிதியிடம் ஆசிபெற்ற கமல்ஹாசன் சிறிது நேரம் உரையாடினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றதாகவும்இ தனது அரசியல் பயணம் குறித்து கருணாநிதியிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ், மக்கள் மீது உள்ள அக்கறை மூன்றையும் அவரிடம் கற்றுக்கொண்டதாகவும் கமல் தெரிவித்தார்.. என் கொள்கையில் திராவிடம் இருக்கும் என்றும், தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் போது, என் கொள்கையிலும் கண்டிப்பாக திராவிடம் இருக்கும் என்றும் கூறினார். மக்கள் சேவைக்காகத்தான் அரசியலுக்கு வந்து உள்ளேன் என்றும், என் கொள்கைகள் என்ன என்பது 21-ம் தேதி தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவுடன் கூட்டணி என்ற கேள்வி தொடர்பாக பதில் அளித்த கமல்ஹாசன், கொள்கையை புரிந்த பின்னர் திமுகவுடன் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.