தனி மாவட்ட அறிவிப்பு... கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அதிமுகவுக்கு மாறுவாரா?

By Asianet TamilFirst Published Jan 9, 2019, 10:18 AM IST
Highlights

கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தினகரன் ஆதரவு அதிமுக உறுப்பினரின் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி அரசு ஏற்றிருக்கிறது. 

கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தினகரன் ஆதரவு அதிமுக உறுப்பினரின் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி அரசு ஏற்றிருக்கிறது. 

நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. ஆனால், இந்தக் கோரிக்கை பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்தது. தற்போது இந்தக் கோரிக்கைக்கு உயிர் கிடைத்திக்கிறது.

 

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் பிரபு தற்போது  தினகரன் ஆதரவாளராக இருக்கிறார். அமமுக மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளராகவும் இருக்கிறார். 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வந்தபிறகும், பிரபு முகாம் மாறாமல், தினகரன் ஆதரவாளராகவே தொடர்கிறார். அதிமுகவிலிருந்து விலகி தினகரனிடம் சென்றபோது, “கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாததால்தான் அங்கிருந்து விலகி வர வேண்டிய சூழல் வந்தது” என்று கூறினார். 

இந்நிலையில் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறது. இதன்மூலம் அவரது கோரிக்கைக்கு அரசு செவி சாய்த்திருக்கிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு பிறகும் தினகரன் ஆதரவாளராக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு இருந்தபோதும், அவரை தகுதி நீக்கம் செய்ய ஆளும் தரப்பு முயற்சி செய்யவில்லை. எப்படியும் அவரை தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிடுவதில் ஆளும் தரப்பு உறுதியாக இருந்து வருகிறது. 

கருணாஸை வழிகொண்டு வந்ததைப்போல பிரபுவையும் தங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்காகவே அவரது நீண்ட நாள் கோரிக்கையை அரசு ஏற்றிருக்கிறது என்று அதிமுகவினர் கூறுகிறார்கள். ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்ட அறிவிப்புக்குப் பிறகும், “இருக்கும் இடத்திலேயே இருப்பேன்” என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அறிவித்துவிட்டார். இனி அரசு என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

click me!