7 தொகுதிகளிலும் பாமக அவுட்...! ராமதாஸை வைச்சு செய்யும் காடுவெட்டி குரு டீம்!

By Asianet TamilFirst Published Feb 23, 2019, 11:55 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் தோற்கும் என்று மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கத் தலைவர் விஜிகே மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் தோற்கும் என்று மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கத் தலைவர் விஜிகே மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குருவின் மரணத்துக்கு பிறகு, அவரது குடும்பத்தினர் பாமகவுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். தொடர்ந்து பாமகவையும் அக்கட்சி நிறுவனர் ராமதாஸையும் விமர்சித்துவருகிறார்கள். அன்புமணி ராமதாஸ் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அங்கே காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் போட்டியிடுவார் என காடுவெட்டி குரு குடும்பத்தினர் கூறிவருகிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி அமைந்துள்ள நிலையில், பாமக 7 தொகுதிகளிலும் தோல்வியடையும் என்று மாவாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கத் தலைவர் விஜிகே மணிகண்டன் அதிரடியாகப் பேசியுள்ளார்.

 நாகை மாவட்டம் குத்தாலத்தில் செய்தியாளர்களிடம் விஜிகே மணி பேசும்போது, “ஓட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதியாகத் தங்களைக் காட்டிக்கொண்டு, வன்னியர் சமூகத்தை ராமதாஸும் அன்புமணியும் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த அ.தி.மு.க.வுடனேயே தற்போது கூட்டணி அமைத்துள்ளார்கள். இதன் மூலம், ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தினரையும் ராமதாஸ் இழிவுபடுத்திவிட்டார்.

கடல் இருக்கும் வரை, உலகம் இருக்கும் வரை அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று கூறிய பாமக, தற்போது எதற்காக கூட்டணி அமைத்தது? அ.தி.மு.க ஆட்சியில் 22 துறைகளில் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் என்று புத்தகம் வெளியிட்டவர் ராமதாஸ். இப்போது எப்படி ஊழலை ஏற்றுக் கொண்டார்?

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரையும் விடுவித்தால் மட்டுமே கூட்டணி என்று பா.ஜ.க.விடம் தற்போது ஏன் நிபந்தனை விதிக்கவில்லை? மது ஒழிப்பு போராட்டம் செய்த அன்புமணி, தற்போது படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று சொல்வது ஏன்? இனியும் ராமதாஸையும், அன்புமணியையும் வன்னியர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அவர்கள் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் பா.ம.க தோல்வியடையும். அன்புமணி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து, காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் போட்டியிடுவார். இனி வன்னியர்கள் பெயரைச்சொல்லி ராமதாஸும் அன்புமணியும் ஓட்டு சேகரிக்கக் கூடாது.

இவ்வாறு வி.ஜி.கே.மணி தெரிவித்தார்.

click me!