ராகுல் மீது அட்டாக்... மோடி அரசுக்கு சாவுமணி... கோபத்தில் கொந்தளித்த கே.எஸ். அழகிரி..!

By Asianet TamilFirst Published Oct 1, 2020, 8:44 PM IST
Highlights

ராகுல் மீது தாக்குதல் நடந்தது மோடி அரசாங்கத்திற்கு சாவு மணி அடிக்க காலம் வந்து விட்டதை காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற அகில இந்திய  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உ.பி. பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் ஹத்ராஸ் சென்றார். அப்போது இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ராகுல் தாக்கப்பட்ட சம்பவம் காங்கிரஸ் கட்சியினரை உசுப்பிவிட்டுள்ளது.
ராகுல் மீதான  தாக்குதலை கண்டித்து தமிழக காங்கிரஸார் சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது. போரட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.  பின்னர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார். “உத்தரப்பிரதேசத்தில் காட்டாட்சி நடந்து வருகிறது. ஏழை எளிய பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒரு வார காலமாக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ராகுல் காந்தி இதில் இறங்கினார்.

ராகுல் மீது தாக்குதல் நடந்தது மோடி அரசாங்கத்திற்கு சாவு மணி அடிக்க காலம் வந்து விட்டதை காட்டுகிறது. மோடி ஆட்சி வீழ்த்தப்படும்” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் நேற்று போலீசார் எரித்தனர். இதனால் நாடு முழுதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ராகுல் காந்தி மீது தாக்குல் நடத்தப்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேசத்தில் பதற்றம் நிலவுகிறது.

click me!