Tomato price: இதை மட்டும் திறங்க.1 கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு நாங்க தர்றோம். நீதிமன்றத்தில் வியாபாரிகள் கதறல்.

By Ezhilarasan BabuFirst Published Nov 25, 2021, 3:20 PM IST
Highlights

இதன் மூலம் தக்காளி விலை அதிரடியாக குறையும், அதன் மூலம் கிலோ 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ எங்கள் சங்கம் தயாராக உள்ளது என தெரிவித்தார். 

தமிழகத்தில் தக்காளி 140 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு கொடுக்க தயார் என தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

தக்காளி என்ற பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்பது போல, அதன் விலை கேட்டாலே மக்கள் பதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அதன் வரத்து குறைந்து தக்காளி விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது.  இதனால் கிலோ ஒன்றுக்கு 140 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக உணவகங்களில் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அப்படி பயன்படுத்தினாலும் உணவு பொருட்களின் விலையும் பன்மடங்கு உயரும் அபாயத்திற்கு நிலைமை தள்ளப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு பண்ணை பசுமை காய்கறி மூலமாக குறைந்த விலையில், அதாவது 1 கிலோ29  ரூபாய்க்கு விற்பனை துவங்கியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்து அதன் காரணமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் வரை குறைந்துள்ளது. 

நேற்றுவரை ஒரு கிலோ தக்காளி 120 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேசமயம் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 160 வரை விற்பனையானது. இந்த நிலையில் இன்று தக்காளி வரத்து அதிகரித்ததால், தக்காளி விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து வரத்து அதிகரித்தால் தக்காளி விலை குறையும் என்றும் சென்னை கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் ஒரளவுக்கு நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

 இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சிவா என்பவர் ஆஜராகி முறையீடு செய்தார். அதில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆண்டு மே-5ஆம் தேதி கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு பின்னர் செப்டம்பர் 28ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கிரவுண்ட் என்ற மைதானம் உள்ளது. இங்குதான் தக்காளி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்குகள் இழக்கப்படும், கொரோனாவுக்குப் பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்தாலும், அந்த குறிப்பிட்ட மைதானம் இன்னும் திறக்கப்படவில்லை,  மைதானத்திற்குள் தக்காளி ஏற்றிவரப்பட்ட 11 லாரிகள் முன்பு நிறுத்தப்பட்ட போது, அதிகாரிகள் அந்த மைதானத்தின் நுழைவு வாயிலை பூட்டி விட்டனர். இதனால் தக்காளிகள் அழுகிய நிலையில், பல நாட்களுக்குப் பின்னர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி லாரிகள் வெளியே எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதுவே தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. தற்போது இந்த மைதானத்தை திறந்தால் ஜெய்ப்பூர், உதய்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா கர்நாடகா வழியாக தக்காளி லாரிகள் இங்கு கொண்டு வந்து மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும்.

இதன் மூலம் தக்காளி விலை அதிரடியாக குறையும், அதன் மூலம் கிலோ 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ எங்கள் சங்கம் தயாராக உள்ளது என தெரிவித்தார். உடனே அரசு தக்காளி மைதானத்தை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும், நிலுவையிலுள்ள வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
 

click me!