அதிமுக பொது செயலாளர் சசிகலா இன்று, முதலமைச்சராக பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், பதவியேற்பு பிரமாண்ட விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.
இதைதொடர்ந்து நேற்று மாலை முதல் சென்னை காமராஜர் சாலை சாந்தோம் சர்ச் பகுதியில் இருந்து சென்னை போர் நினைவு சின்னம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அமைச்சர்களும், விழா ஏற்பாடுகளை நேரில் சென்று, பார்வையிட்டனர்.
ஆனால், பதவி பிரமாணம் செய்து வைக்கும் கவர்னர், சென்னைக்கு வரவில்லை. இதனால் சசிகலா, பதவியேற்கும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பத்திரிகையாளர் ராஜகோபால், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஒ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை, கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தார். அதனை பெற்று கொண்ட கவர்னர், சசிகலா முதலமைச்சராக பதவியேற்பதற்கான தீர்மான நகலையும் பெற்று கொண்டார். அதன் அடிப்படையில், அதிமுகவிர் பதவி பிரமாணம் செய்தவாற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்க உள்ளது. இதனால், பதவி பிரமாணம் செய்த பிறகு, மீண்டும் சிக்கல் ஏற்பட கூடாது என்பதற்காக கவர்னர், இந்த விழாவை, ஒத்தி வைத்துள்ளார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு, சசிகலாவுக்கு எதிராக அமைந்தால், அவருக்கு எப்படி பதவி பிரமாணம் செய்யலாம் என, கவர்னவருக்கு நோட்டீஸ் போகும். இதுபோன்ற சர்ச்சையில் சிக்காமல் இருக்கவே, ஒரு வாரத்துக்கு பின், பதவியேற்பு விழாவை ஒத்தி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற அட்டர்னி ஜெனரல் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை, கவர்னர் வித்யாசாகர் ராவ் சந்தித்து பேசியுள்ளார்.
மேலும், சசிகலா பதவியேற்பு விழாவுக்கும், மத்திய அரசுக்கு எவ்வித தொடர்.பும் இல்லை. இதை தடுத்து நிறுத்தியது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டுக்கு இடமே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.