தற்பெருமைக்காக கட்சியை மோசமாக சித்தரிப்பதா.? கட்சியை சேதப்படுத்த உரிமை கிடையாது.. குஷ்பு மீது ஜோதிமணி அட்டாக்!

By Asianet TamilFirst Published Jul 31, 2020, 8:08 PM IST
Highlights

கட்சியை சேதப்படுத்த தனிநபர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை குஷ்பு புரிந்துகொள்ளவேண்டும் என்று கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் கட்சிக்குள் அதீத ஜனநாயகமும், கருத்து சுதந்திரமும் உண்டு. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றுக் கருத்துக்களை கவனமாக கேட்டு மதிக்கக்கூடியது. அதனால்தான் காந்தி குடும்பத்தின் தலைமையை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பி ஏற்கிறார்கள். ஏன் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறீர்கள்? என்கிற கேள்வியை அடிக்கடி நான் எதிர்கொள்ள நேர்கிறது. இந்த தேசத்தை காங்கிரஸ் கட்சி மட்டுமே அதன் இயல்பான பன்முகத்தன்மை, அனைத்து மக்களின் மொழி, வரலாறு, கலாச்சராம், பண்பாட்டை மதித்து, புரிந்துகொண்டு, வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்த முடியும். இரண்டாவதாக அதன் உள்கட்சி ஜனநாயகம்.
கடந்த காலத்தில் நான்கூட பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு விவகாரத்தில் மாறுபட்ட கருத்தைப் பொதுவெளியில் பேசியிருக்கிறேன். அதே போல குஷ்புவுக்கும் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாறுபட்ட கருத்து இருக்குமானால் அதுபற்றி பேச அவருக்கு உரிமையுண்டு. ஆனால், 600 பக்கத்தையும் முழுமையாகப் படித்துவிட்டு பேச வேண்டும். ஏனெனில் இது எதிர்கால தலைமுறை மீது, தேசத்தின் மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. நூறாண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் கல்வியை, மாநிலங்களின் உரிமையை மறுக்கும், வரலாற்றுப் பொய்களை திணிக்கும் பேராபத்து இந்த கல்விக் கொள்கையின் அடிநாதமாக உள்ளது.
மேலோட்டமாக ஒன்றிரண்டு நல்ல விசயங்களை மட்டும் பார்த்துவிட்டு முடிவு செய்யக் கூடிய விசயமல்ல இது. முழுவதும் படித்து புரிந்துகொண்ட பிறகும் ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், அதை இயல்பாக சொல்லாமல் காங்கிரஸ் கட்சியும், தலைமையும் ஏதோ கருத்து சுதந்திரத்தை அனுமதிக்காதது போலவும், நாட்டைப் பற்றிக் கவலைப்படாதது போலவும், அதை மீறிதான் தேசத்திற்காக கலகக்குரல் எழுப்புவது போலவுமான ஒரு தொனியில் குஷ்பு பேசுகிறார். இது மிகத் தவறானது. நமது தற்பெருமைக்காக கட்சியை மோசமான வெளிச்சத்தில் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.


எந்தவொரு கட்சியும் அதன் லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால், தியாகத்தால் உருவானது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை இந்த கட்சிக்காகவும், தேசத்திற்காகவும் ஏராளமான இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. அளப்பற்ற தியாகங்களை செய்த பாராம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. கட்சியை சேதப்படுத்த தனிநபர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை குஷ்பு புரிந்துகொள்ளவேண்டும்.” என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார். 
 

click me!