ஆந்திர மாநிலத்தில் படிப்படியாக மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெகன் மோகன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அங்கு 880 மதுக்கடைகளை நேற்று முதல் மூட உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தையும் 2 மணி நேரம் குறைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக கடந்த மே மாதம் பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்தின் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதற்கான நடவடிக்கைகளின் முதல்கட்டமாக ஆந்திர மாநிலத்தில் அனைத்து மதுக்கடைகளையும் அரசுடைமையாக்கியுள்ள அம்மாநில அரசு, 880 மதுக்கடைகளை செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் மூடியுள்ளது.
அக்டோபர் ஒன்றாம் தேதியான நேற்று முதல் 3,500 மதுக்கடைகள் மட்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திராவில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மொத்தம் 12 மணி நேரம் மதுக்கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், இனி காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 9.00 மணி மட்டுமே மது வணிகம் நடைபெறும் என்றும் ஆந்திர மாநில அரசு அறிவித்து, செயல்படுத்தியிருக்கிறது.
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அந்த மாநிலத்தின் முழு மதுவிலக்கு கனவு அடுத்த 4 ஆண்டுகளில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.