ஜெயலலிதா - மோடிக்கு தூதராக இருந்ததே நான்தான்... ரகசியத்தை வெளியிட்ட மைத்ரேயன்..!

By Thiraviaraj RMFirst Published Jul 24, 2019, 1:43 PM IST
Highlights

பல ஆண்டுகளாக மோடிக்கும்- ஜெயலலிதாவுக்கு இடையே விசுவாசமான தூதராக செயல்பட்டு வந்திருக்கிறேன் என மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார்.  
 

பல ஆண்டுகளாக மோடிக்கும்- ஜெயலலிதாவுக்கு இடையே விசுவாசமான தூதராக செயல்பட்டு வந்திருக்கிறேன் என மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார்.  

மாநிலங்களவையில் நடந்த பிரிவு உபச்சாரத்தின் போது அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பேசுகையில், ‘’மாநிலங்களவையில் பதினான்கரை ஆண்டு கால நீண்ட சேவைக்குப் பிறகு நான் ஓய்வுபெறுகிறேன். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை இது எனது அஸ்தமன நேரம். இந்த வேளையில் என் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு மூன்று பதவிக்காலங்களுக்கு என்னை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றி அறிதலை பதிவு செய்ய விரும்புகிறேன்.

உண்மையில், மாநிலங்களவைக்கு அ.இ.அதிமுக சார்பாக மூன்று பதவிக்காலங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு எம்பி என்ற
தனிச் சிறப்பை அவர் எனக்கு வழங்கியிருக்கிறார். அவர் மீது என்றைக்கும் மாறாத எனது விசுவாசம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். 
இந்த அவையில் எப்போதும் என்னை சகோதரராகக் கருதி வழிநடத்திய ஒருவருக்கு நான் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்க
வேண்டும். அவர் தான் அருண் ஜெய்ட்லி. 

அவர் விரைவாக உடல் நலம் தேறி என்னைப்போல் மற்றவர்களுக்கு எதிர்காலத்தில் வழிநடத்தவேண்டும் என்று மனதாற விரும்புகிறேன். என நீண்ட கால நண்பரும் இந்தியப் பிரதமருமான திரு நரேந்திர மோதி அவர்களை நான் மறக்க இயலாது. 90களில் இருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. பல ஆண்டுகளாக அவருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் இடையே விசுவாசமான தூதராக செயல்பட்டு வந்திருக்கிறேன். என் மீது தனிப்பட்ட அன்பை வைத்திருப்பதற்காக அவருக்கு நான் நன்றி பாராட்டக் கடமைப்பட்டு உள்ளேன்.
 
கடந்த பதினான்கரை ஆண்டுகளில் நான் குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். பொடா மசோதாவை
நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டம், கூச்சல் குழப்பத்துக்கு இடையே மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா
நிறைவேற்றப்பட்டது, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை, அவர் இந்த அவையின் முன்
ஆஜராக அழைக்கப்பட்டது, லோக்பால் மசோதா குறித்து நள்ளிரவு வரை நீண்ட விவாதத்துக்குப் பிறகு திடீரென அவை ஒத்திவைக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய இந்தியா - அமெரிக்கா இடையேயான அனுசக்தி ஒப்பந்தம் என இந்தப் பட்டியல் நீள்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, தமிழக மீனவர்களின் நடனுக்காக, ஈழத்தமிழர்களின் நிலை ஆகியவை குறித்து திரும்பத்திரும்ப இத்தனை ஆண்டுகளில் இந்த அவையில் நான் உணர்வுபூர்வமாக குரல்கொடுத்து போராடியிருக்கிறேன். ஒரேயொரு விஷயம் மட்டும் எப்போதும் என் நெஞ்சில் முள்ளாய் உறுத்துகிறது. 

இந்த அவை பல நேரங்களில் பலருக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்தது, இறந்து போன மக்களுக்கு இரங்கல் தீர்மானங்களை நிறைவேற்றி, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் மௌன அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் ஈழத்தின் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள், எனது தொப்புள்கொடி உறவுகள், இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இந்த அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவது மௌன அஞ்சலி செலுத்துவது என்பதை விட அது பற்றி இந்த அவை கவனத்தில் கூட எடுத்துக் கொள்ளவில்லை.

 

இது எனது நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக தைத்துக்கொண்டே இருக்கும். எனது தமிழ் ஈழத்தின் சகோதர சகோதரிகளுக்கு காட்டவேண்டிய
குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வைக் கூட இந்த அவர் காட்டவில்லை. எனது வாழ்வின் முடிவு ஏற்பட்டாலும் கூட எந்தவித இரங்கல் தீர்மானமோ மௌன அஞ்சலியோ இந்த அவையில் எனக்கு வேண்டாம் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். எனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் வேளையில் என் மீது மாறா அன்பு காட்டிய இந்திய அரசியலில் பழுத்த அனுபவசாலியான மாநிலங்களவைத் தலைவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என அவர் தெரிவித்தார்.
 

click me!