
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் நகலை வைத்து நிதியமைச்சர் ஜெயகுமார் அஞ்சலி செலுத்தியதால், சர்ச்சை கிளம்பியுள்ளது.
2017ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை, நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயகுமார் சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தர்ர். அதில், 9 ஆயிரம் கோடி வரை பற்றாக்குறை இருந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2 முதலமைச்சர்கள் பொறுப்பேற்றுவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் நிதி நிலை அறிக்கை இறுதி செய்யப்பட்டு, இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நிதியமைச்சர் ஜெயகுமார், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, பட்ஜெட் உரை அடங்கிய கோப்புகளை சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அரசு சம்பந்தப்பட்ட கோப்பின் நகலை வெளியிடத்துக்கு கொண்டு சென்று, இதுபோன்று சமாதியில் வைப்பது முறையா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், ஜெயலலிதாவின் அத்தனை திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மக்கள் பயன்பெறும் வகையில், முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.
கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்துறை என அனைத்து திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே சட்ட பஞ்சாயத்து போன்ற அமைப்பினர், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், நிதியமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட்டின் நகலை, ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.