என் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும் அவ்வளவு தான்... எச்சரித்த விவேக்!

First Published Mar 29, 2018, 10:55 AM IST
Highlights
Jaya TV CEO and Sasikala nephew Vivek Jayaraman is a beneficiary DVAC


சட்டப்படிப்பில் முறைகேடாக இடம்பெற்றதாக எழுந்த புகார் குறித்து பேசிய விவேக் ஜெயராமன், கல்லூரியில் சேர்ந்த அனைத்து சான்றிதழ்களையும் சமர்பிக்க தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் என் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று விவேக் ஜெயராமன் கூறியுள்ளார். சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற என் சகோதரி மூலமாக வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் சேர்ந்ததாக விளக்கமளித்துள்ளார்.

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் சட்டப்படிப்பில் சேர்வதில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்திருந்தது. அதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் ஸ்பான்சர் கோட்டாவில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் சேர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், 'அந்தக் குடும்பமே மோசடிக் குடும்பம். சட்டப்படிப்பில் சேர விவேக் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் கட்டாயம் சிறைக்குச் செல்வார்கள்' என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து இன்று (மார்ச் 28) அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயா டிவியின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமன், "சட்டப் படிப்பைத் தொடர எத்தனையோ கல்லூரிகள் இருந்தாலும், முறையாகவும் நியாயமாகவும் பயில வேண்டும் என்பதற்காகவே நான் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன்.

என் உடன்பிறந்த சகோதரி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். என் சகோதரி மூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில், முறையான சான்றிதழ்களை சமர்ப்பித்தே கல்லூரியில் சேர்ந்தேன். தற்போதும் அது சம்பந்தமான அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன். உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறி இருந்தால் அப்போதே எனக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கும்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

"படிப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே டெங்கு காய்ச்சல் பாதிப்பினாலும், வேறு சில வேலைகளாலும் படிப்பைத் தொடர முடியாத நிலையில், நான் சட்டப் படிப்பிலிருந்து விலகி விட்டேன். நிலைமை அப்படி இருக்க நான் முறைகேடாக சீட் வாங்கியதாக வேண்டுமென்றே சிலர் விஷமத்தனமான தகவல்களை உண்மைக்கு மாறாகப் பரப்புகின்றனர். இது அடிப்படை உண்மைக்கு மாறானது" என்றும் குற்றம் சாட்டியுள்ளார் விவேக்.

மூத்த அமைச்சராக இருக்கும் ஜெயக்குமாரோ இதுகுறித்து உண்மையை விசாரிக்காமல் கடுமையான வார்த்தைகளால் என்னையும் என் குடும்பத்தையும் நாகரீகமற்ற முறையில் விமர்சித்துள்ளார்.

என்னைக் கைது செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். என் மீது தவறு இருந்தால் ஜெயக்குமார் அவர்கள் தாரளமாக என்னைக் கைது செய்து கொள்ளட்டும். எத்தகையை நடவடிக்கையையும் நான் சட்டப்பூர்வமாக சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்ட விவேக், என் பெயரைச் சொல்லி என் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும், அதற்கான சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறேன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

click me!